சுற்றுலா வலய வீதிகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
நாட்டின் அனைத்து சுற்றுலா வலயங்களில் உள்ள அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்யுமாறு ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நெடுஞ்சாலை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு. பிரேமசிரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறையின் ஊடாக எமது நாடு அதிகளவில் அந்நிய செலாவணியைப் பெறுகிறது.சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும்.சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதாக இருந்தால் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். அனைத்தும் இலவசமாக அருகில் வரும் வரை காத்திருக்க முடியாது.
நாம் பல வருடங்கள் முன்னோக்கிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். எமது நாடு மிகவும் அழகான நாடு. இது முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அழகிய சூழல்கள், கடற்கரைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் மத ஸ்தலங்கள் நிறைந்த நாடு.
மேலும், பல்வேறு காலநிலை வலயங்கள் உள்ளன. சில மணிநேரங்களில் வெவ்வேறு காலநிலை வலயங்களின் அனுபவத்தைப் பெற முடியும்.
உலகின் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாக எமது நாடு காணப்படுகிறது. நாம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டுமானால் தேவையான வசதிகளை வழங்க வேண்டும்.
உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். இவை எங்களைப் பற்றிச் சிந்தித்துச் செய்யும் பணிகளல்ல. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தே செயற்பட வேண்டும்.
எனவே, சுற்றுலா வலயங்களில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி ,வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சமிந்த அதலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.