ஒரே நாடு - ஒரே சட்டம்! ஜனாதிபதியிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை
ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2021 ஒக்டோபர் 26ம் திகதி நாட்டில் ஒரே விதமான சட்டத்தைச் செயற்படுத்துவதற்கான சிபாரிசுகளை முன்வைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டது.
செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அதன் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.
இந்த செயலணியின் பதவிக்காலம் கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதி மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் தமது செயலணியின் செயற்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர், தமது செயலணியின் பதவிக்காலத்தை இனிமேலும் நீடிக்கும் தேவை ஏற்படாது என்றும், ஒரே நாடு, ஒரே சட்டம் கருதுகோளை செயற்படுத்துவதற்கான சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை தமது செயலணியினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.