சட்ட பின்னணியை ஆராயாமல் அறிக்கையிட வேண்டாம்: சபாநாயகர் கோரிக்கை
உண்மைகள் மற்றும் சட்டப் பின்னணியை ஆராயாமல் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவது, பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை விதைப்பது மாத்திரமன்றி ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று சபாநாயகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் கொந்தளிப்பான பொது உணர்வைக் கருத்தில் கொண்டு, அறிக்கைகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயல்படுமாறு சபாநாயகர் அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரம்

எனவே அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பது நாட்டின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து குடிமக்களும் அமைப்புகளும் உதவுமாறு சபாநாயகர் அலுவலகம் கோரியுள்ளது.
சட்ட பின்னணி
முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்து ஜூலை 14ஆம் திகதியன்று சபாநாயகர், பதவி விலகல் கடிதத்தை பெற்றார்.
இதனையடுத்து அதன் நம்பகத்தன்மையை பரிசீலித்த பின்னர் ஜூலை 15ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியின் பதவி விலகலை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்த நிகழ்வு இடம்பெற்றதன் பின்னர், மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 2022 ஜூலை 16ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதியின் பதவி விலகல் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட நாளில் இருந்து 48 மணித்தியாலங்களுக்கு முந்தாமலும், 7 நாட்களுக்கு பிந்தாமலும் வேட்பு மனுக்களுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன்படியே அந்த திகதி 2022, ஜூலை 19ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த திகதியில் வேட்பு மனுக்களை பெற்ற பின்னர், 48 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன்படியே ஜனாதிபதி தெரிவுத் தேர்தலுக்கான திகதி 2022 ஜூலை 20 என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.