காங்கேசன்துறையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்கான காரணம் வெளியானது
யாழ். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகில் இறந்து கிடந்தவரின் தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றால் பலமாகத் தாக்கப்பட்டு உள்ளதாகவும் அதுவே மரணத்துக்குக் காரணம் எனவும் யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் அறிக்கையிடப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் உள்ள கட்டிடத் தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமரா காணொளிப் பதிவுகளில் பெரிய சுத்தியலுடன் அப்பகுதியில் பயணித்த சந்தேக நபரே கொலை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் நேற்று முன்தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்களுக்குக் கட்டுக்காவலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கூரற்ற ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டதால் குறித்த நபர் உயிரிழந்தார் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியினால் ஆராயப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரே இந்தக் கொலையைச் செய்துள்ளார் என சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் தம்மால் நிரூபிக்க முடியும் என காங்கேசன்துறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.