மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசிடம் இராதாகிருஷ்ணன் விடுத்துள்ள கோரிக்கை
தமிழ் முற்போக்கு கூட்டணியானது மின்சூளாக இருந்து உங்களைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றி இனி ஒளியைப் பாய்ச்சும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (V.Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
மூன்று கட்சிகளும் புரிந்துணர்வுடன் பயணித்தால் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 300 மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒமிக்ரோன் என்ற புதிய வைரஸ் பிறழ்வும் உருவாகியுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் திண்டாடுகின்றன. இலங்கையிலும் பல பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றன.
குறிப்பாக பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இதனால் மக்களின் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. கோதுமை மா விலை உயர்வானது, பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதேபோல 'எரிவாயு' பிரச்சினையும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
எந்நேரத்தில் எந்த பாகம் வெடித்து சிதறும் எனத் தெரியவில்லை. இந்நிலைமைக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்புக் கூறவேண்டும்.
விஞ்ஞானப்பூர்வமான நடைமுறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றியிருந்தால் இந்நிலைமையைத் தவிர்த்திருக்கலாம். இது மனித உயிர்களுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும்.
எனவே, உறுதியான தீர்வை அரசு முன்வைக்க வேண்டும். அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 'டோர்ச்' (மின்சூளம்) சின்னம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று 'பெட்டரிகளும்' இயங்கு நிலையிலிருந்தால்தான் மின்சூளத்தால் பிரகாசமாக ஒளியைப் பாய்ச்ச முடியும்.
அதேபோல கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளுக்குமிடையில் சிறந்த புரிந்துணர்வு உள்ளது. 6 வருடங்களாகக் கூட்டணியாகப் பயணிக்கின்றோம்.
இனி மின்சூளம் ஏந்தி வருவோம். மக்களைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றி, ஒளியைப் பாய்ச்சும் விதத்தில் எமது பயணம் தொடரும்.
மேலும் பாகிஸ்தானில் நேற்று துன்பகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையர் ஒருவர் அடித்து, துன்புறுத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
இதற்காக இலங்கை அரசும் முழுமையாகப் போராட வேண்டும். இச்சம்பவம் தொடர்பில் நூறு பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர், நீதி நிலைநாட்டப்படும் எனப் பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.
இது வரவேற்கத்தக்கது. அதேபோல இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கான கோரிக்கையை நாம் இன்னும் விடுக்கவில்லை.
அவ்வாறு விடுத்தால் நிச்சயம் சந்திப்புக்கான வாய்ப்பு கிடைக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா செல்லவுள்ளது. அவர்கள் முதலில் சென்று வரட்டும் என தெரிவித்துள்ளார்.
இதில் மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.ராம், மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரும், ஹட்டன் வலய கல்வி பணிப்பாளருமான அருந்ததி சத்தியேந்திரா, பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் உட்பட ஏனைய பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |