களுவாஞ்சிக்குடி நீதிமன்ற முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கு இன்று(22.04.2026) அழைக்கப்பட்ட போது நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இதன்போது திறந்த நீதிமன்றில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான், குறித்த வழக்கினை எதிர்வரும் காலங்களில் புதிய நீதிவான் மூலம் நடத்துமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்ற பின், புதிய நீதிவானை நியமிக்க பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தார்.

அத்துடன், அந்த புதிய நீதிவான் முன்னிலையில் பிணை கோரிக்கை தாக்கல் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சந்தேக நபராக முன்னிலைப்படுத்தப்பட்ட நீதிவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமாரை 12 நாட்கள் விளக்கமறியலில் வைத்து, எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனுடன், இவ்வழக்கில் இருந்து தாம் விலகிக் கொள்வதாகவும் திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.
களஞ்சியசாலை மோசடி குற்றச்சாட்டு
கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாக செயற்பட்ட ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் தனது சேவை காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த சான்றுப் பொருள்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கில் சந்தேக நபராக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்திருந்தனர்.
மேலும் அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளரும் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.
இந்நிலையில், நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை 2026.01.02 ஆம் திகதியன்று இடைநிறுத்தி, ஆணைக்குழுவிற்கு இடமாற்றம் செய்தது.
அதன் பின்னர் இன்று(22) குறித்த வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட நிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக முன்னிலையாகினார்.