இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
இலங்கை கடற்பரப்பில் கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ள 12 கடற்தொழிலாளர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்கச்சிமடத்தில் உள்ள ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களே இவ்வாறு கோரிக்கை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் கடற்தொழிலார்கள் 12 பேரையும் விடுதலை செய்யுமாறும், கடந்த 2019 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரியும், விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பாத மண்டபத்தைச் சேர்ந்த 4 கடற்தொழிலாளர்களை மீட்டுத் தருமாறும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான
கடற்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.