காணாமல் போன மீனவரை தேடி தருமாறு உறவினர்கள் கோரிக்கை
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட கடலட்டை பிடிப்பதைத் தனது ஜீவனோபாய தொழிலாகக் கொண்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் கடல் அட்டை பிடிப்பதற்காகத் தொழிலுக்குச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸுஜூத் கான் பாசாத் (வயது 30) கடந்த 6ஆம் திகதி திருகோணமலையிலிருந்து தொழிலுக்காக பருத்தித்துறை சென்றதாகவும், அதேவாரம் தொடர்ச்சியாக தொழிலுக்குச் சென்று வந்ததாகவும் கடந்த 10ஆம் திகதி இரவு 9 மணி வரை தனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் பின்னர் இன்றுவரை எவ்வித தொடர்பும் இல்லையென மனைவி தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல்போனவருடன் கடல் அட்டை பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற மவ்ஜுன் என்பவரை நேரில் சென்று இது தொடர்பாக எமது செய்தியாளர் வினவிய போது,
கடந்த சனிக்கிழமை காலை இருவரும் ஒன்றாகக் கடலுக்குச் சென்றதாகவும் பின்னர் கடலட்டை பிடிப்பதற்காக பாஸாத் கடலுக்குள் இறங்கி சுழியோடிக் கொண்டிருந்ததாகவும் சுமார் அரை மணி நேரம் ஆகியும் அவர் மேலே வராமையினால் தனது முதலாளியிடம் இது சம்பந்தமாக தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் பல படகுகளில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டதாகவும், அவரை கண்டுபிடிக்காமல் போனமையினால் அன்றைய தினமே கரை திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இது தொடர்பாக குச்சவெளி பொலிஸ் நிலையம் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் உதவி கிடைத்தால் இவரைத் தேடும் பணி தீவிரமடையும் எனவும், இதுதொடர்பாக அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கி இவரைத் தேடுவதற்காக உதவுமாறும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.