தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றச்சாட்டு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்கு உடைபட்டு வருகின்றதாக வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காகப் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை சிதைத்து லாபம் தேடி வருகின்றதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே அந்த அமைப்பு இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் மேலும்,
தமது வங்குரோத்து அரசியலை நிமிர்த்துவதற்காகக் கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வந்ததாகவும், இந்த நிலையில் தமது போராட்டங்களைத் திசை திருப்பி அரசினை திருப்திப்படுத்த முயல்கின்றனர்.
தேர்தல் வெற்றிக்கு முன்னர் சரிந்து கிடந்த அரசியல் நிலையை மீளகட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைப் பயன்படுத்தியும், அவர்களது உணர்வுகளைப் பயன்படுத்தியும் வருகின்றனர்.
இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பால் கிளிநொச்சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் போராட்டத்தைக் குழப்பும் வகையிலும், இலங்கை அரசை திருப்திப்படுத்தும் வகையிலும் தற்போது யாழில் குழப்பகரமான போராட்ட சூழலை உருவாக்க முயல்வதாகவும் அவர்களால் சாடப்படுகின்றது.
போலியான அரசியல் தலைமைக்கு வாக்களித்தமையையிட்டு மக்கள் தலைகுனிய வேண்டிய நிலைக்கு அவர்களின் செயற்பாடு தற்போது காணப்படுவதாகவும், சுய இலாப அரசியலுக்காகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் செயற்பாட்டைச் சிதைக்கும் இவர்களது செயற்பாடு மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவையாகக் கட்சி உறுப்பினரின் வாக்கைக் கொள்ளையடித்து வெட்கமின்றி அரசியல் செய்யும் இவர்களை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.



