தலைமன்னார் - இராமேஸ்வரம் பாலம் தொப்புள் கொடி உறவினை பன் மடங்கு வலுவடைய செய்யும்...! சி.அ.யோதிலிங்கம்
தலைமன்னார் - இராமேஸ்வரம் பாலம் தொப்புள் கொடி உறவினை பன் மடங்கு வலுவடைய செய்யும் என சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்த வாரம் எழுதிய ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடனான போட்டி
அதன் முழு விபரம் வருமாறு, தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையே பாலம் அமைப்பது தொடர்பான விவகாரம் மீண்டும் பேசு பொருளாகியிருக்கின்றது.
இது பேசு பொருளாகுவதற்கு காரணமாக இருந்தவர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தான். கொழும்பில் இடம்பெற்ற உலகளாவிய புத்தாக்க மற்றும் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் இந்த விவகாரத்தை இந்தியத் தூதுவர் வலியுறுத்தியிருக்கின்றார். இந்தப் பாலம் அமைக்கும் திட்டம் அவசியமானது மட்டுமன்றி அவசரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.

இந்தத் திட்டத்தை தாமதிப்பதற்கான காலம் கடந்து விட்டது என்றும் மேலும் கூறியிருக்கின்றார். அவரது உரையைப் பார்க்கும் போது இந்தியா இதனை முக்கிய மூலோபாய நகர்வாக எடுத்திருக்கின்றது போலவே தெரிகின்றது. நாடுகளுக்கிடையே பாலங்கள் அமைப்பது புதிதான ஒன்றல்ல.
பொருளாதார, கலாச்சார, சமூக பரிவர்த்தனைக்கு இது மிகவும் அவசியம. ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரிட்டனுக்கும், பிரான்சிற்க்கும் இடையே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா வளர்ச்சியடைந்து வருகின்ற முக்கிய பொருளாதார நாடாக இருப்பதினால் இலங்கைக்கு இதனால் கிடைக்கின்ற பொருளாதார நன்மைகள் அதிகமாக இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதார நலன்கள் பெரிதாக இல்லை. மூலோபாய நலன்கள் தான் முக்கியமாக இருக்கின்றன. சீனாவின் ஆதிக்கம் தென்னிலங்கையில் வலுவூன்றிய நிலையில், இந்தியா தன் பங்கிற்கு போட்டிபோட முனைகின்றது.
பல்வேறு ஒப்பந்தங்களை இந்தியா இலங்கையுடன் மேற்கொண்டிருந்தாலும், அதன் நடைமுறைப் பயன்பாடு மிகவும் குறைவு.
பாதுகாப்பு ஒப்பந்தங்கள்
இலங்கை அரசாங்கம் இந்தியாவின் நிர்பந்தத்தினால் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டாலும் அதனை சரியாக நடைமுறைப்படுத்துவதில் பின்னடிப்பு செய்கின்றது.
பாதுகாப்பு ஒப்பந்தம் அதற்கு நல்ல உதாரணமாகும். பாதுகாப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை அரசாங்கம் இதுவரை வெளியிடாமல் வைத்திருக்கின்றது.
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலே ஆளும் சித்தாந்தமாக உள்ளது. இதனால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இக்கருத்தியலுக்கு கட்டுப்பட்டே செயற்படும். இந்த கருத்தியல் மேற்குலக எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்ற மூன்று தூண்களில் கட்டியெழுப்பப்பட்டது. இதனால் சிங்கள தேசம் எப்போதும் இந்திய மூலோபாய நகர்வுகளுக்கு எதிராகவே செயற்படும். தலைமன்னார் இராமேஸ்வரம் பாலம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு சிங்கள தேசத்திடமிருந்து எழுந்திருக்கின்றது.

இந்த எதிர்ப்புக்கு வரலாறு, ஐதீகங்களும் காரணமாக உள்ளது. பண்டைய தமிழ்நாட்டு மன்னர்களின் படையெடுப்புக்கள் சிங்கள ஆள் மனதில் தற்போதும் ஆழமாக படிந்திருக்கின்றது.
தொகுத்து பார்க்கும் போது சிங்கள தேசத்தின் எதிர்ப்புக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்தியா இலங்கையை அடிமைப்படுத்திவிடும் என்ற அச்சம். இரண்டாவது, தமிழ்நாட்டின் ஆதிக்கம் இலங்கையில் வளர்ந்து தாயகத் தமிழர் பலமடைந்து விடுவர் என்ற அச்சம்.
முதலாவது அச்சம், இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை செயற்பட்டதால் எழுந்ததாகும். முந்தைய காலத்திலும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைந்த காலங்களில் இந்த அச்சம் எழுந்திருக்கின்றது.
பனிப்போர் நிகழ்ந்து வந்த காலத்தில் இந்தியா அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கு எதிராக இருந்தது. இந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மேற்குலகத்திற்கு சார்பாக இருந்தது.

மேற்குலக நலன்கள்
மேற்குலக நலன்கள் இலங்கையில் பேணுவதற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அமெரிக்காவின் குரல் வானொலி நிலையம் அமைத்தல், திருமலை எண்ணை குதங்களை வழங்குதல் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்ததால் இந்தியா மாற்று நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.
அதன் விளைவுகளாகத்தான் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கியமையும், இலங்கை - இந்திய ஒப்பந்தமும் நடந்தேறின. சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்க காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே நல்லுறவே நிலவியது.
அந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் இந்திய நலன்களுக்கு சார்பாகவே செயற்பட்டது. இதனால் ஆதிக்கம் செலுத்தும் தேவை எதுவும் இந்தியாவிற்கு இருக்கவில்லை.

இந்தியாவுடனான நல்லுறவினைப் பயன்படுத்தி இலங்கை சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் (1964) சிறீமா - இந்திரா ஒப்பந்தம் (1974) கச்சதீவு ஒப்பந்தம் (1974) என்றவற்றிலும் கைச்சாத்திட்டுக் கொண்டது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான பண்டாரநாயக்கா இந்தியாவின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். “நேருவின் அடிவருடி” என ஜே.ஆர்.ஜெவர்த்தனாவினால் கேலி செய்யப்பட்டும் இருந்தார்.
நேரு என்ன கொள்கை பயன்பாடு
வெளியுறவு விடயங்களில் நேரு என்ன கொள்கையைப் பின்பற்றினாரோ அதனை அப்படியே, பண்டாரநாயக்காவும் பின்பற்றினார். தற்போது இந்திய நலன்களுக்கு எதிராக சீனாவிற்கு இலங்கை களம் அமைத்து கொடுத்துவிட்டது. இதனால் இந்தியா எப்போதும் ஆதிக்கம் செலுத்த முற்படும் என்ற அச்சம் இலங்கைக்கு இருக்கின்றது. இந்தியாவிற்கு இது தேசிய பாதுகாப்பு பிரச்சனையாக இருப்பதனால் மௌனமாக இருந்து விட முடியாது.
இந்தியாவிற்கு மேற்கு, வடக்கு, வடகிழக்கு என வில் போல பாதுகாப்பு பிரச்சனை உள்ளது. இதனால் முக்கிய பாதுகாப்பு மையங்கள் பல தெற்கிலேயே இருக்கின்றன.
இதனை வேறு இடங்களுக்கு நகர்த்தவும் முடியாது. இந்நிலையில் இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான சக்திகள் காலூன்றினால் இந்த பாதுகாப்பு மையங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என இந்தியா அஞ்சுகின்றது. இதனால் இலங்கைத் தீவு மீது இந்தியா எப்போதும் கவனமாகவே இருக்கும். தன்னுடைய நலன்களை இலங்கையில் பேணுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அது செய்யும்.

இதற்காக சாம, பேத, தான, தண்டத்திற்கும் அது தயங்க மாட்டாது. இது இந்தியாவின் இருப்பு சார்ந்த பிரச்சினை. எப்போதும் பெரிய நாட்டிற்கு கீழ் இருக்கும் சிறிய நாடு பெரிய நாட்டின் நலன்களுக்கு எதிராக செயற்படக் கூடாது. தன்னுடைய நலன்களில் சிறிய அந்நாடு அக்கறை காட்டுவது தவறாக மாட்டாது.
கூடியவரை பெரியநாட்டின் நலன்களுக்கும் சிறிய நாட்டின் நலன்களுக்கும் இடையில் பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அதனைப் பலப்படுத்த வேண்டும்.
ராஜபக்சர்கள் உருவாக்கிய பிரச்சினை
பண்டாரநாயக்காவும், சிறீமாவும் இத்தகைய அணுகுமுறையினையே பின்பற்றினர். இந்த அணுகுமுறை மகிந்தவுக்கும் கோட்டபாயவுக்கும் தெரியவில்லை. மகிந்தவும், கோட்டாபாயவும் உருவாக்கிய பிரச்சினையையே அநுர குமார திசநாயக்காவும் தூக்கி சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டாவது, தமிழ்நாடு பற்றிய அச்சம். இந்த அச்சம் தமிழ்நாட்டுத் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் வரலாற்று நினைவுகளால் உந்தப்பட்டது. தமிழ்நாட்டுடன் இணைத்து தாயகத் தமிழர்களை சிங்கள தேசம் பார்க்கும் போது சிறுபான்மை உணர்வு அதற்கு வருகின்றது.
இது வரலாற்று ரீதியாகவே இருக்கின்ற ஒன்று, உண்மையில் தாயகத் தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தால் இந்த அச்சம் தேவையற்றது. ஆனால் தாயகத்தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்க சிங்கள தேசம் தயாராகவில்லை.

குறைந்தபட்சம் இந்தியாவின் முயற்சிகளினால் முன்வைக்கப்பட்ட 13 வது திருத்தத்தை முழுமையாக அமூல்படுத்த கூட சிங்கள தேசம் தயாராகவில்லை.
எனவே இந்தியாவின் நலன்களோடு ஒன்றிணையாத வரை இந்திய அச்சம் இருந்து கொண்டேயிருக்கும். அதேபோல தாயகத் தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்காத வரை தமிழ்நாடு பற்றிய அச்சம் இருந்து கொண்டேயிருக்கும். இந்தியாவும், தமிழ்நாடும் வரலாறு முழுவதும் இருக்கப் போகின்றது. எனவே வரலாறு முழுவதும் அச்சத்துடன் தான் சிங்கள தேசம் கழிக்கப் போகின்றதா? சிங்கள தேசம் தான் இதற்கு விடைகளைத் தேட வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையின் வடக்கு - கிழக்குப் பிரதேசங்கள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக தலைமன்னார் பிரதேசம், வடமராட்சி கிழக்குப் பிரதேசம், திருகோணமலைப் பிரதேசம் முக்கியத்துவம் வாய்நதவை. இந்திய நலன்களுக்கு எதிரான சக்திகள் இங்கு காலூன்றுவதை அது ஒருபோதும் அனுமதிக்காது.
சீனா வடக்கில் காலூன்றுவதற்கு பல தடவை முயற்சி செய்த போதும் அது ஒருபோதும் வெற்றியளிக்கவில்லை. காற்றாலைத் திட்டத்தையும் இந்தியா தடுத்திருந்தது. இந்த மூலோபாயப் பிரச்சினை இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியும். அதனால் தான் வடக்கு - கிழக்கில் சீனாவுக்கு அனுமதி கொடுப்பதை அது சற்று அடக்கி வாசிக்கின்றது.
சிங்கள தேசத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம்
சீனாவைக் கையாளுதல் என்ற மூலோபாய நடவடிக்கைக்காக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடன் இந்தியா கூட்டுச்சேர்ந்திருந்தாலும் மேற்குலகமும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்புவதில்லை. தென்னாசியா முழுமையாக தன்னுடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்றே அது கருதுகின்றது.
தலைமன்னார் இராமேஸ்வரம் பாலம் அமைப்பதன் முக்கிய மூலோபாயம் வடக்கு - கிழக்கில் உள்ள மூலோபாயப் பிரதேசங்களை காப்பாற்றுவது தான்.
இதனை முழுமையாக கைப்பற்றிக் கொண்டு தென்பகுதி நோக்கி முன்னேறுவது இந்தியாவின் நோக்கமாக இருக்கலாம். இங்கே தான் தமிழர்களுக்கு இருபிடிகள் கிடைக்கின்றன.
ஒன்று இந்திய நலன், இரண்டாவது தமிழ்நாட்டுடனான தொப்புள்கொடி உறவு. இந்தியா தனது நலன்களை இலங்கையில் பேண வேண்டுமென்றால் இலங்கையில் வாழும் ஒரு பகுதி மக்களின் ஆதரவு அவசியம். இந்த ஆதரவுத்தளமாக தாயகத் தமிழர்களும், மலையகத் தமிழர்களுமே இருப்பர்.

தாயகத் தமிழர்களது விவகாரத்தையும் அது தொடர்பான தமிழ்நாட்டு மக்களின் அழுத்தத்தையும் பயன்படுத்தியே இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடும் நிலையை உருவாக்கியது. இன்றும் இந்தியாவிற்கு தாயகத் தமிழர்களின் ஆதரவிற்கான தேவை இருக்கின்றது.
இலங்கைத் தீவில் சீனா காலூன்றி இருக்கும் வரை இந்தத் தேவை இருந்து கொண்டேயிருக்கும். இந்தியாவிற்கு முழு இலங்கைத் தீவும் தேவையாக இருப்பதனால் தென் இலங்கையையும் ஒதுக்க மாட்டாது. அதேவேளை அழுத்தம் கொடுக்கும் கருவி தேவை என்பதால் தமிழ் மக்களையும் ஒரு எல்லைக்கு மேல் புறக்கணிக்காது.
இந்தியா இன்று வரை தனது வெளி உறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களாக “இலங்கையின் ஆள்புல மேன்மையும் தமிழ் மக்களின் சமத்துவமும்” என்பது சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கத் தவறக் கூடாது. காலத்தின் தேவைக்கேற்ப ஒரு காலத்தில் “ஆள்புல மேன்மை” என்பதையும் இன்னோர் காலத்தில் தமிழ் மக்களின் சமத்துவம் என்பதையும் அதிகம் தூக்கிப்பிடிக்க பார்க்கும்.
சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம்
மலையக மக்களைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு அதிக பொறுப்பு இருக்கின்றது. தமிழ் நாட்டிலிருந்து குடியேற்றப்பட்டவர்கள் என்ற வகையிலேயே இந்தப் பொறுப்பு அதிகமாக இருக்கின்றது.
சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் மூலம் மலையக மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தியதிலும் இந்தியாவிற்கு அதிக பங்குண்டு.
இந்தியா முழு மலையக மக்களையும் இந்தியாவிற்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழுப் பேரையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும். ஒரு பகுதியை அழைத்து இன்னோர் பகுதியை விட்டதன் மூலம் அரசியல் ரீதியாக மலையக மக்களைப் பலவீனப்படுத்தியுள்ளது.

மலையக மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் இந்தியா அக்கறை காட்டியது குறைவு. இந்தியா வலுவான அக்கறை காட்டியிருந்தால் பிரஜாவுரிமை பெறுவதற்கு 30 வருடங்கள் தாமதப்பட வேண்டிய நிலைமை வந்திருக்காது.
200 வருடங்களாக மேலாக இருக்கும் மலையக மக்கள்
200 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த போதும் நிலமற்ற, வீடற்ற, முகவரியற்ற சமூகமாக மலையக மக்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்தியாவும் ஒரு காரணம். மலையக மக்கள் பற்றிய பொறுப்பு இந்தியாவிற்கு மட்டுமல்ல அவர்களை இங்கு குடியமர்த்திய பிரித்தானியாவிற்கும் உண்டு.
இந்தியாவையும், பிரித்தானியாவையும் நோக்கி நீதி கேட்பதற்கு மலையக மக்கள் ஒருபோதும் தயங்கக் கூடாது, இரண்டாவது தமிழ்நாட்டுடனான தொப்புள் கொடி உறவு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இரண்டு நாடுகளையும் ஆங்கிலேயர் ஆட்சி செய்ததினால் தொப்புள் கொடி உறவு வலுவாக இருந்தது.
கடவுச்சீட்டு, விசா கெடுபிடிகள் எதுவும் இருக்கவில்லை கொழும்புக்கு பயணம் செய்வதை விட தமிழ் மக்கள் தமிழ் நாட்டிற்கு பயணம் செய்வது அதிகமாக இருந்தது. குடும்பத்தில் மனைவிமார்களுடன் கோபித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு பயணம் செய்தவர்களும் இருக்கின்றனர்.

வல்வெட்டித் துறை போன்ற கடலோடிகள் அதிகமாக வாழும் பிரதேசங்களுக்கு வலுவான திருமண உறவுகளும் இருந்தன. தற்போதும் இருக்கின்றது சிதம்பரம் கோவிலுக்கு யாழ்ப்பாணத்திலும் சொத்துக்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தவர்கள் கல்வி கற்கும் முக்கிய பிரதேசமாகவும் தமிழ்நாடு இருந்தது.
தலைமன்னார் - இராமேஸ்வரம் பாலம் இந்த தொப்புள் கொடி உறவினை பன் மடங்கு வளர்க்கச் செய்யும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் போன்று ஒரு சூழல் மீண்டும் தோன்றலாம். இது தாயகத் தமிழர்களை அரசியல் ரீதியாக மேலும் பலமடையச் செய்யும். உறவு குறைவாக இருப்பதற்கு தொடர்பாடல் பலமாக இல்லாததும் ஒரு காரணம்.
தலைமன்னார் - இராமேஸ்வரம் பாலம்
பாலம் தொடர்பாடலை மேலும் பலப்படுத்தும். அரசியல் விவகாரங்களை உடனுக்குடன் நேரடியாக பரிமாறிக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
அதே போன்று, கேந்திர முக்கியத்துவ பிரதேசங்களின் இணைப்பாகும். தென்னாசியாவைப் பொறுத்தவரை வடக்கு - கிழக்கும், தமிழ்நாடும் வலுவான கேந்திர பிரதேசங்களாகும். இந்த கேந்திர பிரதேசங்கள் இணைந்து செயற்படுவதற்கும் இந்தப் பாலம் வாய்ப்புகளைக் கொடுக்கும்.
இது புவிசார் அரசியலில் தமிழ் மக்களின் நிலையை ஓங்கச் செய்யும். இதனை விட தாயகத் தமிழர்களின் பொருளாதாரமும் பலமடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முனைவர்.
விவசாயப் பொருளாதாரத்திலும் கடல் பொருளாதாரத்திலும் தமிழ்நாட்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட முதன்மையான மாநிலம் என்பதை கவனிக்க நாம் தவறக்கூடாது.

பாலம் அமைக்கப்படும் போது மலையக மக்கள், தமிழ்நாட்டு மக்கள் உறவுகளும் வலுவடையும். சாதாரண மலையக தொழிலாளர்களும், தமிழ்நாடு சென்றுவரக்கூடிய நிலை ஏற்படும்.
இது மலையக மக்களின் வாழ் நிலையிலும், அரசியலிலும் வளர்ச்சியை கொண்டு வரும். சிங்கள தேசத்திற்கும் பாலம் சாதகமானதாக இருக்கும்.
அதனுடைய இறக்குமதிச் செலவுகள் மிகவும் குறைவடையும். இந்தியப் பொருளாதாரத்துடன் இலங்கை இணைக்கப்படுவதால் பொருளாதாரமும் நன்கு வளர்ச்சி அடையும். நுணுக்கமாகப் பார்ப்பின் புதிய இலங்கையை உருவாக்குவதில் தலைமன்னார் - இராமேஸ்வரம் பாலம் அதிகம் பங்களிக்கும் என்று கூறலாம்.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 21 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam