பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு : பா.டெனிஸ்வரன்
மன்னாரில் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும், திருப்பலி ஆராதனைகள் மற்றும் பூஜை வழிபாடுகளில் விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறி மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் (B.Deniswaran) தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளடங்களாக சிலாவத்துறை, முருங்கன், இலுப்பைக்கடவை உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் (19) மன்னார் நீதிமன்றத்தில் இலங்கை குற்றவியல் நடவடிக்கை கோவை பிரிவு 106 இன் கீழ் ஒரு விசேட விண்ணப்பம் ஒன்றை செய்திருந்தனர்.
குறித்த விண்ணப்பத்தில் குறிப்பாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெறும் திருப்பலி ஆராதனைகள் மற்றும் ஏனைய ஆலயங்கள் சிலவற்றில் இடம்பெறும் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும், குறித்த திருப்பலி ஆராதனைகள் மற்றும் பூஜை வழிபாடுகளில் விடுதலைப் புலிகளின் இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம் பெற உள்ளதாகவும் கூறி நாளை 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை தடை செய்யுமாறு விண்ணப்பம் செய்திருந்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் இணைந்து விண்ணப்பம் ஒன்றை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
குறிப்பாக சுகாதார வழி நடைமுறைகளுக்கு அமைவாகவும், அதனை மீறாத வகையில் தற்போது நாட்டில் கோவிட் தொற்று அதிகமாக காணப்படுகின்றமையினால் சுகாதார வழி முறைகளை மீறாத வகையிலும், ஆலயங்களில் இடம்பெறும் நாளாந்த திருப்பலி ஆராதனைகள், பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளுவதற்கு தடை விதிக்காத வகையில், இலங்கை அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற அடிப்படை உரிமைகளை மீறாத வகையில், அடிப்படை உரிமை சுதந்திரத்தை பாதிக்காத வகையில் சமய வழிபாடுகள் மற்றும் யுத்தத்தின் போது இறந்த உறவுகளை நினைவேந்துகின்ற நடவடிக்கைகளையும் தடை செய்யாத வகையில் கட்டளை ஒன்றை பிறப்பிக்க நீதவானிடம் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு அமைவாக விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் அல்லது கொடி, சின்னங்களை பயன்படுத்தி எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என்று நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
மேலும் ஆலயங்களில் இடம் பெறுகின்ற சாதாரண திருப்பலி ஆராதனைகள் மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை எனவும், கண்டிப்பாக சுகாதார வழி முறைகளை உரிய முறையில் பின் பற்றி நாளாந்த பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம்
அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
