அதானி குழுமத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இலங்கை அரசாங்கத்தின் முடிவு
மன்னார் காற்றாலை மின்சார திட்டத்திற்காக அதானி குழுமம் செலுத்திய திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை மட்டுமே அரசாங்கம் திருப்பி செலுத்தும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் நிலையான எரிசக்தி ஆணையத்தில் இந்த திட்டம் தொடர்பாக வைப்புத்தொகையை செலுத்தியுள்ளது.
அதானி குழுமம்
இந்தநிலையில், அதானி குழுமம் அரசாங்கத்திடமிருந்து ஆரம்ப செலவுகளைக் கோரியதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
எந்தவொரு திட்டமும் திரும்பப் பெறக்கூடிய மற்றும் திரும்பப்பெற முடியாத வைப்புத் தொகைகளை உள்ளடக்கிய நிலையிலேயே தயாரிக்கப்படும்.
இதனடிப்படையில், இலங்கை அரசாங்கம் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகைகளை மட்டுமே அதானி குழுமத்துக்கு திருப்பிச் செலுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகைகள் எவ்வளவு என்பதை தீர்மானிக்க நிலையான எரிசக்தி ஆணையகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அரசாங்கத்தின் இந்த முடிவு அதானி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




