மதுபானங்களின் விலையை குறையுங்கள்: டயனா கமகே விடுத்துள்ள கோரிக்கை
நான் ஜனாதிபதியிடமும் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். தயவு செய்து மதுபானங்களின் விலையைக் குறையுங்கள் என இராஜாங்க அமைச்சரான டயனா கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(22.08.2023) சுற்றுலா சட்டத்தின் விதிமுறைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு தற்போது உள்ள செயற்பாடுகளுடன் செல்லுமாயின் முன்னேறுவது கடினமான விடயமாக மாறிவிடும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
உலக நாடுகள் பலவற்றில் நூற்றுக்கு எழுபது சதவீத வருமானம் இரவு செயற்பாடுகள் மூலமே கிடைக்கிறது.
ஆகவே இலங்கையை 24மணி நேரமும் இயங்க வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இப்போது நாட்டில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவர்களின் வருகை வளர்ச்சியடைந்துள்ளது.
இவற்றை அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும், சிகிரியாவுக்கும், மதஸ்த்தலங்களுக்கும் செல்ல விரும்புவதில்லை.
அவர்கள் வருவது பொழுதுபோக்கிற்காக. எனவே அவர்களுக்குச் சிறந்தது இரவு களியாட்டங்களே. தற்போது இரவு 10 மணிக்கு முன்பாகவே மதுபான சாலைகளும், உணவு விடுதிகளும் மூடப்படுகின்றன.
இவ்வாறு செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஏன் எமக்கு நாட்டை இந்தியாவின் கோவா போன்று மாற்றமுடியவில்லை.
இதற்கு எமது மக்களிடத்தில் உள்ள சோர்வு தன்மையே காரணம். நான் ஜனாதிபதியிடம் கூறுவது 1800களில் செயற்பட்டது போன்று தற்போது செயற்பட முடியாது.
அக்காலத்தில் இருந்த நடைமுறைகள் இப்போதைய நடைமுறைக்கு ஒத்துவராது என்றே கூறியுள்ளேன்.

ஏன் கடற்கரைகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளை 1 மணிக்கு நிறுத்த வேண்டும். இசையால் மீன்களுக்கு எந்தவிட தொந்தரவும் ஏற்படாது.
அத்தோடு 10 மணிக்கு மதுபான சாலைகள் மூடப்படுகின்றன. மது அருந்துபவர்கள் எப்படியும் அருந்துவார்கள். அவர்களைத் தடுக்க முடியாது. நாட்டில் மது அருந்துபவர்கள் இல்லையென்றால் அனைத்து மதுபான சாலைகளையும் மூடிவிட்டு நாட்டில் மதுபானம் இல்லையென்று கூறிவிடுவோம்.
அவ்வாறு நடக்கப்போவதில்லை என அனைவருக்கும் தெரியும். ஆகவே நான் ஜனாதிபதியிடமும் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்.
தயவு செய்து மதுபானங்களின் விலையைக் குறையுங்கள். மதுபானங்களை மக்களுக்கு வாங்கி குடிக்க முடியவில்லை. அவர்களிடம் பணிமில்லை.
இதனால் மக்கள் வீடுகளில் கசிப்பு உற்பத்தி செய்து குடிக்கும் நிலை உருவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.