சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆபத்தான இலங்கையரை நாடு கடத்திய இந்தியா
இலங்கையில் தேடப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஆபத்தான சந்தேக நபரை, இந்தியா நாடு கடத்தியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று மாலை சந்தேக நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையேயான உயர் மட்ட ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து சந்தேக நபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
நாடு கடத்திய இந்தியா
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தே பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, கெசல்வத்தேயில் வசிக்கும் 34 வயதான சந்தேக நபர், பல கடுமையான குற்றங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
2015 இல் கெசல்வத்தே பொலிஸ் பிரிவுக்குள் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொலை,

2018 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்கு உதவி செய்தல்,
2021 ஆம் ஆண்டு மட்டக்குளி பொலிஸ் பிரிவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்,
2021 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கையெறி குண்டு வைத்திருந்தல் மற்றும் கெசல்வத்த, வெள்ளவத்தை மற்றும் புளூமெண்டல் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கொழும்பு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.