யாழில் கஞ்சா பொதிகள் மீட்பு! தீவிர விசாரணை முன்னெடுப்பு (Photos)
வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய யாழ்ப்பாணம் - வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் இன்று (03.10.2022) அதிகாலை குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பின் போது மீட்கப்பட்ட 217 கிலோ கிராம் கஞ்சா வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அதேபகுதியில் நேற்று பிற்பகல் விற்பனை நோக்கத்திற்க்காக வைக்கப்பட்டிருந்த 214 லீட்டர் மண்ணெண்ணெய் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊவா பல்கலைக்கழக மாணவன் கைது
போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் ஊவா பல்கலைக்கழக மாணவன் ஒருவரையும், போதைப்பொருள் வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவனின் உடைமையில் இருந்து 750 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.