கட்டாரில் இலங்கையர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியானது
கட்டார் நாட்டில் இலங்கையர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
கட்டாரின் - டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கையை சேர்ந்த காவலர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில்,இவ்வாறு கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டார் இளைஞர் ஒருவர், பெண் ஒருவருடன் வாகனத்தில் குறித்த குடியிருப்புத் தொகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த காவலாளி, அவரின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கோரியுள்ளார்.
எனினும், அடையாள அட்டையைக் காண்பிக்க மறுத்தமையால், காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதன்போது காவலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்கான இலங்கையைச் சேர்ந்த காவலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவடைவதால் அவர் இலங்கைக்கு நாடு திரும்ப காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.