அரசாங்கத்தின் சிந்தனையற்ற செயற்பாடே நாட்டின் இந்த நிலைக்கு காரணம்: கு.திலீபன்
அரசாங்கத்தின் சிந்தனையற்ற செயற்பாட்டாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் விமர்சித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 80 பேருக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாடகை வீட்டிலும் தங்கினேன்
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றம் தவிர்ந்த ஏனைய நாட்களில் தங்களுடைய மாவட்டத்தில் இருக்கின்ற ஒருவர் என்ற வகையில் எதனையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களின் வீடுகள் எரிக்கப்படுகின்ற போது கூட நான் குருமன்காட்டில் உள்ள வாடகை வீட்டிலேயே இருந்தேன்.
இவ்வாறான நிலையில் இரண்டு பட்டா வாகனத்தில் எனது வீட்டிற்கு வந்த 25 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் தாங்கள் பாதுகாப்பு தருவதாகக் கூறி இரவிரவாக பாதுகாப்பளித்தனர். இது சந்தோசமான விடயமாக இருந்தாலும், நான் இந்த மாவட்டத்திற்கு பெரியதாக எதுவும் செய்யாவிட்டாலும் கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தியுள்ளதாக நினைத்தேன்.

இதற்கப்பால் ஜனாதிபதியும், விவசாய அமைச்சராகவும், வன இலாகா அமைச்சராகவுள்ளவரும் அறையினுள் இருந்து பேசும் போது வெற்றுக்காணிகளை பாவிக்க வேண்டும், இளம் விவசாயிகளுக்கு அதனைக் கையளிக்க வேண்டும், காணிகளைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். எனினும் இவை அந்த அறைக்குள் இருந்து கதைப்பதுடன் சரியாகி விடுகின்றது.
கெட்ட பெயர் வாங்குவது ஜனாதிபதியோ, அமைச்சரோ இல்லை
இன்று வெற்று காணிகளுக்குள் சென்று எங்கள் மக்கள் மரத்தையோ, கத்தரி செடியையோ வைத்தால் வன இலாகா தங்களுடைய இடம் என்கின்றனர். அத்துடன் கைதும் செய்கின்றனர். இதனால் கெட்ட பெயர் வாங்குவது ஜனாதிபதியோ, அமைச்சரோ இல்லை.
ஆகவே வெகு விரைவில் நான் எதிர்பார்க்கும் விடயம் வவுனியா மாவட்டத்தில் மிக விரைவாக வன இலாகாவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நிலை உருவாகும். மதுரா நகர் கிராமத்திலும் அவ்வாறான நிலையே உள்ளது.
ஒரு முறை இருமுறை சொல்லிப் பார்க்கலாம். தொடர்ந்தும் இதே நிலைதான் என்றால் நானும் மக்களுடன் இணைந்து வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படும்.
நாங்கள் வெற்றுக்காணிகள் தொடர்பில் கதைக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக எவ்வாறு வழக்குப் போடலாம் என வழக்கறிஞர்களுடன் வன இலாகாவினர் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர்.
அதைப்பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் உங்கள் பிரதேசங்களில் வன இலாகாவுக்குரியதோ, பிரதேச செயலகத்திற்குரியதோ வெற்றுக்காணியாக இருந்தால் எனக்கோ எமது வட்டார செயலாளர்களுக்கோ அறிவியுங்கள்.
அதனை பிரதேச செயலாளர் ஊடாக உங்களுக்குப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். இன்று அரசாங்கத்தின் சிந்தனை அற்ற செயற்பாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனதுக்குள் வெம்பிக்கொண்டிருந்தாலும் வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையே கடந்த காலத்தில் காணப்படுகின்றது. அமைச்சர்களின் வாகனங்கள் வவுனியாவைத் தாண்டியே யாழ்ப்பாணம் செல்லும்.
அவர்களைப்
பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் மட்டும்தான் வட மாகாணத்தில் உள்ள மாவட்டமாகக்
கருதுகின்றனர்.
அண்மையில் வனவள அமைச்சர் யாழ்ப்பாணம் சென்று காட்டைப்பற்றிக் கதைக்கின்றார்.
காடில்லாத யாழ்ப்பாணத்தில் காட்டை பற்றி கதைக்கின்றார். காடு உள்ள
வவுனியாவுக்குச் செயலாளரை அனுப்புகின்றார்'' இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri