எந்த நேரத்திலும் அரசாங்கத்திலிருந்து விலகத் தயார்! ராஜாங்க அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) மத்திய செயற்குழு முடிவு ஒன்றை எடுத்தால், எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தமது அணியினர் தயாராக இருப்பதாக நுகர்வோர் விவகார ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது அந்த கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல. கட்சியில் நிறைவேற்றுச் சபை, மத்திய செயற்குழு என்பன இருக்கின்றன.
மத்திய செயற்குழு எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம். இதனையே நான் மூன்று மாதங்களுக்கு முன்னர் மத்திய செயற்குழுவில் முன்வைத்தேன்.
எனினும் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கோ, சஜித் பிரேமதாசவிற்கு பின்னாலோ செல்ல மாட்டோம். அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் செல்ல மாட்டோம்.
நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே இருப்போம்.
எனினும் தற்போது துரதிஷ்டவசமாக மக்கள் விடுதலை முன்னணி, சரத் பொன்சேகா, பொதுஜன பெரமுன போன்ற தரப்பினரின் விமர்சனங்களுக்கு கட்சி உள்ளாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலைமைக்கு சென்றுள்ளது.
எவரது விமர்சனங்களுக்கு உள்ளாகும் தேவை எமக்கில்லை. அவற்றை நாங்கள் கவனத்திலும் கொள்வதில்லை. எமது கட்சிக்கு தனியான கொள்கை, நிலைப்பாடுகள் உள்ளன எனவும் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
