நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து
மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக் குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் கமக்கார அமைப்பினர் ஆகியோரால் நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டு, குளத்தினை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவுமாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உறுதியளித்துள்ளார்.
விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கை
நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் விவசாயிகள் ஆகியோருக்கிடையில் 30.04.2026இன்று நித்தகைக்குளம் பகுதியில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போதே இவ்வாறு நீர்ப்பாசனப் பொறியியலாளரால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு நித்தகைக்குளம் மற்றும், குளத்தின் கீழான 1500ஏக்கர் வயல்நிலங்கள் என்பவற்றை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச் செய்திருந்தது.
இத்தகையசூழலில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருடைய தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த குளம் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டதுடன், குளத்தின் கீழான வயல்நிலங்களும் வனவளத் திணைக்களத்தால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் அப்பகுதி விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025ஆம் ஆண்டு நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, குளத்தின் சீரமைப்புவேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வழக்குத் தொடர்வதற்கான முயற்சி
மந்தகதியில் சீரமைப்புப்பணிகள் இடம்பெறுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் விவசாயிகளால் இதன்போது நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன்போது பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளர் பதிலளிக்கையில்,
இதுவரை 40வீதமான அபிவிருத்தி வேலைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 30.06.2026ஆம் திகதிக்குள் வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டு விவசாயிகளுக்காக குறித்த குளம் கையளிக்கப்படுமென ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா பேரனர்த்த காலத்தில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள முடியாதமையினால் உரியகாலத்திற்குள் குளத்தின் சீரமைப்பு வேலைகளை முடிவுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் குளத்தின் சீரமைப்பு வேலைகளை முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படுமென பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் விகிர்தன் தெரிவித்தார்.
அத்தோடு குறித்த குளத்தின் அபிவிருத்தி வேலை தொடர்பான திட்ட வரைபடம் மற்றும் தமிழ் மொழியிலான திட்டவரைபு என்பவற்றை தாம் ஒருவருடத்திற்கு முன்னரே நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கோரியிருந்தபோதும் இதுவரை கையளிக்கப்படவில்லை என விவசாயிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் மேமாதம் 06ஆம் திகதிக்கிடையில் தமிழ்மொழிமூலமான திட்டவரைபு மற்றும் வரைபடம் என்பவற்றை தாம் விவசாயிகளிடம் கையளிப்பதாக முத்துஐயன்கட்டு பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதத்திற்குள் அபிவிருத்தி வேலைகளை முடிவிற்கு கொண்டுவந்து விவசாயிகளிடம் குளத்தினை கையளிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எம்மிடம் உறுதியளித்துள்ளனர்.
இவ்வாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக அபிவிருத்தி வேலைகள் முடிவுறுத்தப்பாடாதுவிட்டால், விவசாயிகள் வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri