முல்லைத்தீவில் போதைப்பொருள் கொடுத்து 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தற்போது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது சகோதரனின் நண்பர்களால் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மனநலம் பாதிப்பு
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர்கள் சிறுமிக்கு ஒரு வகையான இனிப்பு (சொக்லேட் ) வழங்கி பின்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
விசாரணை
குறித்த சிறுமி பிரதேச செயலக அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக இன்று மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைக்கும்,பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியினால் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
