ரணில் இந்த மாதம் நாடாளுமன்றம் செல்லமாட்டார்! - வெளியாகியுள்ள தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த மாதம் நாடாளுமன்றுக்கு செல்லமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில், இறுதியாக இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், ரணில் விக்ரமசிங்களை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடிவுசெய்யப்பட்டது.
இதன்படி, ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில், ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் நாடாளுமன்றம் செல்வார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இந்த மாதம் நாடாளுமன்றம் செல்லமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமாக பரவும் அபாயம் இருப்பதே இதற்கான காரணமாகும். அதனால் ஜூலை மாத நடுப்பகுதியில் அவர் நாடாளுமன்றம் செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது என நம்பத்தகுதந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் கோவிட் காரணமாக இந்த காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது.
அதனால் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், ரணில் விக்ரமசிங்கவின் பெயரை பரிந்துரை செய்து கட்சியின் செயலாளரினால் அதுதொடர்பான கடிதம் அனுப்பிவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.