புதிய ஜனாதிபதியும் பிரதமரும் சொல்வதை செய்வார்களா: இரா.சம்பந்தனின் கேள்வி
ராஜபக்சர்களோ அவர்களது அணியினரோ எந்தவொரு காலத்திலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள் அல்லர். இவ்வாறானதொரு நிலையில் அவர்களின் தயவுடன் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கூறுவதை எந்த அடிப்படையில் நம்பலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிப்பதாவது,
தன்னுடைய பதவிக் காலத்தினுள் அரசியல் தீர்வைக் காண்பேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு
அதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ரணில் அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பவேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
வாயால் வாக்குறுதிகளை வழங்குவதில் ராஜபக்சர்களும் அவர்களின் கட்சியினரும் வல்லவர்கள்.
ஆனால், அவர்கள் வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் கூட சிங்கள மக்களுக்கு ராஜபக்சர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் அவர்களுக்கு வாக்களித்த மக்களே அவர்களை விரட்டியடிக்க வீதிக்கு வந்தனர்.
ராஜபக்சர்கள்
ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் இருந்து ராஜபக்சர்கள் விலகினாலும் தற்போது அந்தப் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் ராஜபக்சர்களின் கட்சியினரின் ஆதரவுடன்தான் செயற்படுகின்றார்கள்.
எனவே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் புதிய ஜனாதிபதியும் புதிய பிரதமரும் வாயால் சொல்வதைச் செயலில் நிறைவேற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் ஆதரவு வழங்குவார்களா என்பது கேள்விக்குறியே.
ஜனாதிபதியினதும் புதிய பிரதமரினதும் செயற்பாடுகள்
புதிய ஜனாதிபதியினதும் புதிய பிரதமரினதும் செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய தாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாட்டின் நலன் கருதியும் தமது மக்களின் நலன் கருதியும் நல்ல கருமங்களை அவர்கள்
முன்னெடுத்தால் அவற்றுக்கு நாம் பூரண ஆதரவை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.