ரணிலின் பெரிய குற்றங்களை விசாரிக்க அரசாங்கத்துக்கு தைரியம் இல்லை! எழுந்துள்ள விமர்சனம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியது போன்ற ஒரு சிறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அவரது பெரிய குற்றங்களை விசாரிக்க அரசாங்கத்துக்கு தைரியம் இல்லை என ஜனபலய இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பினால் நேற்று(25) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அதன் பேச்சாளர் விதர்ஷன கன்னங்கர, இந்த நடவடிக்கையை ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகக் கருதக்கூடாது என்று வலியுறுத்தினார்.
பெரும்பான்மையான மக்கள் இன்னும் தற்போதைய அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும், கைது செய்யப்பட்டதை ஜனநாயக விரோதமாக சித்தரிப்பவர்கள் எதிர்க்கட்சி ஆதரவாளர்களாக செயற்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடுமையான குற்றங்கள்
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அரசாங்கம் உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க விரும்பினால், பட்டலந்த சித்திரவதைக் கூடம், மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் உயிரத்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் உள்ளிட்ட மிகக் கடுமையான குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
எவ்வாறாயினும் தற்போதைய இந்தக் கைது அரசியல் நோக்கம் கொண்டது அல்ல, மாறாக சட்டப்பூர்வமான மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டது என்று கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



