டொலரின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ரணில் கூறும் ஆலோசனை
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால், ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Rickramasinghe) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் இணையத்தளம் வழியாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபவதை ஏனைய நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனை பெறுவதற்கான சான்றிதழாக கருத முடியும். குறிப்பாக அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 6 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
இதனால், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர இலங்கைக்கு மாற்று வழி கிடையாது. உலகமும், இலங்கையும் தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடியான நிலைமையில், ஊழியர்களை தொழில்களில் இருந்து நீக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதிக்காது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால், அமெரிக்க டொலரின் பெறுமதியை 240 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலைக்குள் வைத்திருக்க முடியும். அப்படியில்லை என்றால், டொலரின் பெறுமதியானது 300 ரூபாய் வரை அதிகரிக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.