தென்னிலங்கை அரசியலை கதிகலங்க வைத்துள்ள மகிந்த - ரணில்! சொந்த செலவில் சூனியம் வைத்த அநுர அரசு
தென்னிலங்கை அரசியலில் விமல் வீரவன்ச மீண்டுமொரு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வாரம் இராணுவ நினைவு தூபிக்கு அருகில் வைத்து வீரவன்ச மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தை எதிர்க்கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அரசியல் நடவடிக்கை
நேற்றையதினம் பிணை கிடைத்து வெளியில் வந்த வீரவன்சவை, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உரையாடியுள்ளனர்.
மகிந்த தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் விமலிடம், பழைய நண்பர் இன்னும் காதலைக் கைவிடவில்லையா எனக் கேட்டுள்ளார். அதற்கு விமலும் சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார்.
சிறிது நேரம் சுகநலன்களை விசாரித்த பின்னர், எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவோம், விரைவில் புதிய அரசாங்கத்தில் சந்திப்போம் என கூறியுள்ளதாக விமலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவை அடுத்து வீரவன்சவை தொடர்புகொண்ட ரணில், பழைய நண்பர் கணிசமான விளம்பரத்தை இலவசமாகவே பெற்றுக்கொடுத்துள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலவச விளம்பரம்
அதற்குப் பதிலளித்த விமல், ஆமாம் சர், மில்லியன் கணக்கிலான விளம்பரம் எனக் கூறியுள்ளார்.
உடனே ரணில், மில்லியனா? மில்லியன் அல்ல, பில்லியன் கணக்கிலான விளம்பரம் என்று கூறியுள்ளார்.
பில்லியன் கணக்கிலான விளம்பரத்தை இலவசமாக தந்ததற்காக பழைய நண்பருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினால் நன்றாக இருக்கும் எனக் ரணில் கூறியுள்ளார்.
தென்னிலங்கை அரசியலில் ஓரங்கட்டப்பட்டிருந்த விமல் வீரவன்ச, தற்போது சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியில்(JVP) விமல் வீரவன்ச செயற்பட்ட காலத்தில், அப்போதைய சக உறுப்பினரான அநுர குமார திஸாநாயக்கவுடன் நெருங்கிய நட்பினை பேணி வந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO