போராட்டத்தினால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி! ரணில் வெளியிட்ட கருத்து
கடந்த ஆண்டு நடைபெற்ற அரசாங்கத்துக்கு எதிரான அரகலய போராட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி தொடர்பில் ஹிக்கடுவை சிட்ரஸ் ஹோட்டலில் நேற்று (24.02.2023) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டின் மே மாதம் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற அரகலய போராட்டம் காரணமாக இலங்கையில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக வெளிநாடுகளில் நம்பத் தொடங்கினார்கள். அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

சுற்றுலாப் பயணிகள்
அவ்வாறான நிலை மாறி தற்போது சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு நாடு அமைதியாக இருப்பதைக் காட்டவே இந்த ஆண்டு பெருந்தொகை செலவழிக்கப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.