ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் : புகையிரத மறியல் போராட்டமும் நடத்த முடிவு!
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும், திட்டமிட்டபடி புத்தாண்டன்று தங்கச்சிமடத்தில் புகையிரத மறியல் போராட்டம் நடத்தப்படும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த வாரம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 தமிழக மீனவர்களையும் அவர்களது 10 விசைப்படகையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இன்று மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம் மீனவர்களை விடுதலை செய்யும் வரை தொடரும், திட்டமிட்டபடி வரும் 1ஆம் திகதி புத்தாண்டன்று மாலை 5 மணிக்கு தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரும் செவ்வாய்க்கிழமை மாநில அரசு சார்பாக மீனவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க வைக்க உள்ளதாகவும், அந்த சந்திப்பில் மீனவர்கள், கைது நடவடிக்கை குறித்தும் சிறையில் உள்ள மீனவர்களை இலங்கை அரசிடம் பேசி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே டெல்லி சென்று வந்த பின்னர் ராமேஸ்வர விசைப்படகு மீனவர்களின் அடுத்த
கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,