மட்டக்களப்பில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பேரணி(video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அரச பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி இன்று (07.01.2023) ஓட்டமாவடியில் இடம்பெற்றது.
இந்த பேரணி சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு கொழும்பு வீதியீனூடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை அடைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முகவரியிடப்பட்ட மனுவினை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.அப்துல் ஹமீட்டிடம் பேரணியின் ஏற்பாட்டார்களால் வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை
பேரணியில் கலந்து கொண்டோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெறும் அரச பயங்கரவாதத்தினை உடனடியாக நிறுத்த வேணடும், மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் எல்லை பிரச்சினை மீள்குடியேறிய காணிகளுக்கான உரிமம் பெற்றுக் கொள்ளாமை போன்ற நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற கோசங்களை எழுப்பி வந்துள்ளனர்.
நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையாக புரிந்தணர்வுடன் வாழ வேண்டும், நாங்கள் முஸ்லீம்களின் உரிமைகள் கிடைக்காமல் தடுக்கும் அதிகாரிகளை மாற்றி பக்கசார்பில்லாத அதிகாரிகளை நியமிக்க கோரிக்கை வைப்பதுடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.