ராஜீவ் கொலை வழக்கு இலங்கையர்கள் எப்போது நாடு கடத்தப்படுவார்கள்! வெளியானது தகவல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் தொடர்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயனபடுத்தி நளினி உள்ளிட்ட அறுவரை கடந்த 11ஆம் திகதி விடுதலை செய்தது.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு பேரில், இலங்கை பிரஜைகள் நான்கு பேரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.தற்போது, விடுதலையான கைதிகள் 4 பேரும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
பயண ஆவணங்கள்
இந்நிலையில், அவர்களை நாடு கடத்துவதற்கான இலங்கையின் ஆவணங்களுக்காக திருச்சி காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளிடம் இருந்து பயண ஆவணங்கள் பெறுவதை பொறுத்தே அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
குறித்த பயண ஆவணங்களை இலங்கை அரசாங்கம் வழங்கியவுடன் கைதிகள் நாடு கடத்தப்படுவார்கள். அதுவரை அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தல்
1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரில் முதல்வரான பேரறிவாளனை உடல்நிலை சீரின்மை மற்றும் நல்ல நடத்தை காரணமாக விடுதலை செய்து மே 18ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைதொடர்ந்து சில மாதங்களில் நளினி, முருகன், சாந்தன், பி ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ் மற்றும் எஸ் ஜெயக்குமார் ஆகிய ஆறு தண்டனைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் நளினியின் கணவர் முருகன் உட்பட நான்கு பேர் இலங்கையர்களாவர்.
இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.