ராஜிதவின் கருத்துக்கள் பணத்துக்கு பேரம்போகும் அவரது பரம்பரை புத்தி - ஹாபிஸ் நஸீர் அஹமட்
மதம் மற்றும் சமூகத்தை அடகு வைத்து விட்டுத்தான் அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்திற்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவளித்ததாக, ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்து, பணத்துக்கு பேரம்போகும் அவரது குணத்தையே காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்களை நஸீர் அஹமட் நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது, ராஜித சேனாரத்ன கடந்த காலங்களில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இவ்வாறான டீல்களை நடாத்திய பழக்க தோஷத்திலேயே தற்போதும் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இலகுவில் பேரம்போகும் மற்றும் பணத்துக்கு அடிமையாகும் எளிய அரசியல்வாதி ராஜித சேனாரத்ன சிறந்த உதாரணம். இவரது இந்த எளிய சிந்தனைகளில் தான், இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பார்க்கின்றார்.
முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் அபிலாஷைகளைச் சவாலுக்கு உட்படுத்தும் விடயங்கள் பற்றி ராஜிதவுக்குத் தெரியுமா? இழந்து போன நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை வெல்ல வேண்டிய வியூகங்களையே நாம் செய்து வருகிறோம்.
வியாபாரம் என்பது எமது பரம்பரைச் சொத்து. இதை அரசியலுக்குள் புகுத்தும் எந்தத்தேவையும் எமக்கில்லை.
இவர், சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், அரச சேவைகளும் வியாபார நோக்கிலிருந்ததை இந்த நாடே அறியும். வெள்ளை வேன் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி, அசிங்க அரசியல் செய்த இவரை, எமது மக்கள் பொருட்படுத்தப் போவதுமில்லை.
இல்லாததைப் பேசியும் கற்பனைக் காரணங்கள் கூறியும் எமது சமூக அடைவு மற்றும் இலட்சியத்திலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது. வருமானத்தை எதிர்பார்த்து ராஜபக்சகளை விமர்சிக்கும் ராஜிதவுக்கு சமயங்களின் அறிவு பற்றி எங்கே தெரியப்போகிறது.
கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தை மதிக்கின்ற மக்கள் வாழும் நாட்டில், மதமும் சமூகமும் விற்கப்படுவதாகவும் இவர், விமர்சித்துள்ளமை கவலையளிக்கிறது. முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் மதத்தைப் பண்டப் பொருளாக இவர் கருதுகிறார் போலுள்ளது.
மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை கொச்சைப்படுத்தப்படுவதை இல்லாதொழிப்பதே, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்போன்ற எம்.பிக்களின் தேவை. இதற்கான வியூகங்களில்தான் இருபதாவது திருத்தம் பற்றிச் சிந்தித்ததாகவும் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.




