ராஜபக்சர்களை ரணில் காப்பாற்றுவதும், ரணிலை ராஜபக்சர்கள் காப்பாற்றுவதும் புதிதல்ல: லக்சயன் முத்துக்குமாரசாமி
ராஜபக்சர்களை ரணில் காப்பாற்றுவதும், ரணிலை ராஜபக்சர்கள் காப்பாற்றுவதும் ஒன்றும் புதிதல்ல என முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஏன் இந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லையென மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தமைக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருட்களின் தட்டுப்பாடு எரிவாயு தட்டுப்பாடு வாழ்வாதார செலவுகளின் திடீர் உயர்வு, உரத்தின் தட்டுப்பாடு மற்றும் டொலரின் இருப்பு பிரச்சினை என பொருளாதாரத்தைச் சீரழித்த கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கோட்ட கோ கிராமம் மற்றும் வீட்டிற்கு போ ராஜபச்ச என்னும் கோசங்களுடன் தன்னெழுச்சியாக கொதித்தெழுந்தார்கள்.
போராட்டங்களைக் கட்டுப்படுத்த கோட்டாபய அரசு துப்பாக்கி பிரயோகம் செய்து உயிர்ப் பலிவாங்கியதும் அனைவரும் அறிந்ததே. மேலும் வலுப்பெற்று போராட்டமானது அலரிமாளிகையின் முன்னாலும், காலி முகத்திடலிலும், அமைதி வழியில் நிகழ்ந்த வண்ணமிருந்தது.
அந்த போராட்டங்களைக் குழப்பும் வண்ணம் அரச ஆதரவாளர்களால் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு அந்த வன்முறை நாடு முழுவதும் பரவியதுடன் பிரதமர் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதுங்கியதும் தாங்கள் அறிந்ததே.
புதிய பிரதமரை நியமிக்கவும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் ஜனாதிபதியால் ஐக்கிய மக்கள் சக்தியிடம் பிரதமர் பதவியினை பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பான எதிர்க்கட்சி என்னும் ரீதியில் சில நிபந்தனைகளை விதித்து அதில் முக்கியமானமை மக்களின் பொதுவான கோரிக்கையான கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து குறிப்பிட்ட காலத்தில் பதவி விலகவேண்டுமெனவும் இருந்தன இதேவிதிமுறையினை ஜே.வி.பியினரும் விதித்திருந்தனர்.
இவ்வாறான அரசியல் அழுத்தம் மற்றும் மக்களின் போராட்ட அழுத்தம் ஆகியவற்றால் கடும் நெருக்குவாரத்திலிருந்த கோட்டாபயவினை காப்பாற்ற எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பிரதமர் பதவியினை எடுக்க ரணில் முன்வந்தார்.
மக்களால் புறக்கணிக்கப்பட்டவராகத் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். ஜனாதிபதி பதவியிலிருந்து பதவி விலகுவதைத்தவிர வேறு எந்த தெரிவும் இல்லாமல் இருந்த கோட்டாபயவினை காக்கும் தெய்வமாக ரணில் தென்பட்டார்.
ரணில் வந்தால் பொருளாதாரம் சீராகும் எனும் மாய வார்த்தைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன இதனைப் பலரும் நம்பினார் இன்றும் நம்புகின்றனர் உண்மையில் நடந்தது வேறு ஒன்றாக இருந்தது. ''கோ கோம் கோட்டா'' எனும் கோசம் வலுவிழக்கச் செய்யப்பட்டது ராஜபக்சங்களை துரத்தும் மக்களின் குறிக்கோள் ரணிலால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ராஜபக்சக்களை ரணில் காப்பாற்றுவதும் ரணிலை ராஜபக்சக்கள் காப்பாற்றுவதும் ஒன்றும் புதிதல்ல. ராஜபக்சக்களின் வழக்குகளைக் கிடப்பில் போட்டு 2019 ஆம் ஆண்டு அவர்களை ஆட்சிபீடம் ஏற்றியவர் ரணில்.
அதேபோல எந்த மத்திய வங்கி கொள்ளை பிரச்சினையும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை ரணிலுக்கு எதிராகப் பாவித்து அரசமைத்தார்களோ அந்த வழக்குகளைக் கிடப்பில் போட்டு மீண்டும் ரணிலையும் அவரது சகாக்களையும் ராஜபக்கசவினர் காப்பாற்றினார்கள்.
இன்று ரணில் மீண்டும் அவரது நண்பர் மகிந்தவின் குடும்பத்தைக் காப்பாற்றவே எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இறங்கியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் ரணிலைப் பதவிநீக்கம் செய்துவிட்டு அரசியல் அமைப்பிற்கு மாறாக சஜித்தை பிரதமராக நியமிக்க அழைத்தபோது சஜித் அன்றைய தன் தலைவருக்கும் மக்களின் தீர்ப்பிற்கும் துரோகம் செய்யவில்லை.
இன்றும் மக்களின் முதன்மை கோரிக்கையான கோட்டாபய பதவிவிலக வேண்டும் என்பதனை முதல் கோரிக்கையாக வைத்து அதனையே பிரதானமாக வைத்திருக்கின்றார்.
பதவி வெறிபிடித்த சஜித் மக்களுக்குத் துரோகம் செய்ய எண்ணவுமில்லை. இதுவே
என்னைப்பொறுத்தவரையில் சிறந்த தலைமைத்துவ பண்பு,
மக்கள் எப்போதும் கொள்கைப்பிடிப்புள்ள தலைவர்கள் பக்கம் நிற்பார்கள் என்ற
நம்பிக்கை எனக்குண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.