ராஜபக்சக்களால் சிங்கள மக்களுக்கு விழுந்த பேரடி! திக்குமுக்காடும் இலங்கை (Video)
இத்தீவில் புலம்பெயர்வதிலிருந்தே சிங்களவர்களது வரலாறு ஆரம்பிக்கிறது. அதாவது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட விஜயன் உள்ளிட்ட 700 தோழர்கள் அவரது தந்தையினால் படகில் ஏற்றி நாடுகடத்தப்பட்டமையினாலேயே அவர்கள் இலங்கைத்தீவை அடைந்தனர்.
அவ்வாறு இலங்கைத்தீவை அடைந்தவர்கள் சுதேசிய மக்களாகிய இயக்கர் – நாகர் இன மக்களை வஞ்சித்து இத்தீவினை அபகரித்துக்கொண்டனர். அத்தோடு இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை உருவாக்கிக்கொண்டுஇ தமக்கான மனைவிமாரையும் அவர்தம் தாயகத்திலிருந்து இறக்குமதி செய்துகொண்டர்.
இவ்வாறு இரு கட்டமாக இந்தியப் பெருங்கண்டத்திலிருந்து இலங்கைத் தீவுக்குள் புலம்பெயர்ந்த 1400 பேரும் இணைந்து உருவாக்கியவர்களே இன்றைய சிங்கள மக்களின் மூதாதையர்கள். இந்தப் புலம்பெயரிகள் வழிவந்த சிங்களவர்களுக்கு, இலங்கையை விட்டால் வேறு நாடில்லை என்ற எண்ணமே அவர்தம் வரலாற்றுப் புனைவின் மையவிடயம்.
2600 வருடத்திற்கு மேலான சிங்கள அரசியல் இயக்கத்தின் மையவிடயமும் அதுவேதான். எனவே இலங்கை தீவென்பது சிங்களத் தீவாகும். அது சிங்களவர்களுக்குரியது மட்டுமே ஆனதாகும். அவர்கள் மட்டுமே வாழத் தகுதிபெற்றதாகும். இந்தச் செய்தியையே மகாவம்சம் மீளமீள வலியுறுத்தியிருக்கிறது.
எனவே சிங்கள குடியானவர் ஒருவர் தன் நாட்டை விட்டுப் புலம்பெயரலாகாது. தன் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக எக்காலத்திலும் இங்கேயே வாழவேண்டும். இந்த விடயத்தைப் பற்றிப் பிடித்தே இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இலங்கையின் அரசியலது மையநீரோட்டம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சிங்கள தேச நலன்சார்ந்த அனைத்து விடயங்களும் இதனை வெளிப்படுத்தியதாகவே அமையும்.
தனிச் சிங்கள சட்டத்திலிருந்து தொடங்கிய இந்தப் பயணம் ஒரேநாடு ஒரே சட்டம் வரை விரிவுபட்டிருக்கிறது. இதனை முதன்மைக்கோசமாக முன்வைத்து ஆட்சி பீடமேறிய ராஜபக்சவினரது கடந்த தேர்தலின் கோஷம் கூட, 'எமது இளைஞர்களைப் புலம்பெயர அனுமதியோம்' என்றே இருந்தது. இந்தக் கோஷத்தினைத் தன் கொள்கையாகக் கொண்டமையினாலேயே தன் அமெரிக்க குடியுரிமைய உதறித்தள்ளிவிட்டு ஆட்சிபீடமேறினார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச.
இவ்வாறு நாட்டுப்பற்றினை உரமாக ஊட்டிய ராஜபக்சவினரை அப்படியே நம்பியவர்களில் சிங்கள டிஜிட்டல் தலைமுறையினர் முதன்மையானவர்கள். அவர்கள், சிங்களவர் – தமிழர் பிரச்சினை சமூகவலைத் தளங்களில் ஏற்படும்போதெல்லாம், 'தமிழர்களுக்கு வாழ உலகம் முழுவதும் இடமுண்டு. ஆனால் சிங்களவர்களுக்கு இலங்கையைத் தவிர வேறு போக்கிடமில்லை' என்பதை முன்வைத்து வாதாடி வந்தனர். ஆனால் இந்த வாதத்தையும், நூற்றாண்டு கால நாட்டுப் பற்றையும் அடித்துத் துவம்சம் செய்திருக்கின்ற பெருமையும் ராஜபக்சவினரைச் சாரும்.
மேலான இனப்பற்றையும், சிங்களம் மட்டுமே முதன்மையானது என்பதையும் வெளிப்படுத்தி, 'பெரும்பான்மையினரின் ஜனாதிபதி'யாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஒருவரது ஆட்சி தொடங்கி இரண்டு வருடங்களுக்குள் நாட்டைவிட்டு புலம்பெயர வரிசை கட்டும் இளையோரின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பைத் தொட்டிருக்கிறது.
நாட்டைவிட்டுப் புலம்பெயர்தல் ஒரு குற்றமாகக் கருதிய இனமொன்று நாட்டைவிட்டு புலம்பெயர நிற்கும் வரிசையின் அளவு நாளாந்தம் நீண்டுகொண்டே போகிறது. இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், பேராசிரியரும், பொதுஜன பெரமுன கட்சியின் பெருந்தூணுமாகிய ஜீ.எல் பீரிஸ், 'நாட்டைவிட்டுப் புலம்பெயர்தல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்' என்கிறார். நிலைமை இப்படியே போனால் ஐம்பது வீதமான இளையோர் நாட்டை விட்டு வெளியேறிவிடுவர் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
இவ்வாறு புலம்பெயர வரிசைகட்டுவோர் யாரெனில், தம் ஆட்சியை வரவேற்க வீதி சுவர்களில் தேசாபிமானத்தை வரைந்து திரிந்த இளையோர்தான் என்கிறார் பொதுஜன பெரமுனவின் முக்கிய பிரமுகர். இவ்வாறு சிங்கள இளையோர் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்வதால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன?
சிங்கள தேசம் சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது. சிங்கள பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையிலேயே நாடு இயங்கும் என்கிற வறட்டுப் பிடிவாதங்களும், இனவாதப் போக்கும் சிதைவடையும். தமிழர்களின் அனுபவத்தின்படி நாட்டைவிட்டு ஐரோப்பிய தேசங்களுக்குப் புலம்பெயர்பவர்கள் மீளவும் நாட்டுக்குத் திரும்புதல் மிக அரிது. ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் ஐரோப்பிய நாட்டுக்கு செல்வராக இருந்தால், அதற்கு அடுத்து அவரது சகோதர சகோதரிகளும், அதற்கு அடுத்து அவர்களுக்குரிய மணப்பெண்களும் பயணமாவார்கள். மணப்பெண்களுக்கு அடுத்து மணப்பெண்ணின் சகோதரன், பின்னர் சகோதரனுக்கு மணப்பெண் என புலம்பெயர்வுச் சங்கிலி நீளும்.
உலகளவில் குறைந்தளவு சனத்தொகைப் பெருக்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் சிங்கள மக்களுக்கு இவ்வாறு நாட்டைவிட்டு இளையோர் வெளியேறுவதால் அவர்தம் கொள்கை சிதைப்புக்கு வழிகோலும். இதனால் இதுவரை கட்டிக்காத்து வந்த ஆட்சியதிகார ஏகபோகம் நலிவடையும். ஏற்கனவே நாட்டில் முஸ்லிம்களும், சீனர்களும் அதிகரித்து வருகின்றனர் என சிங்கள கடுந்தேசியவாதிகள் வெளிப்படுத்தும் அச்சம் நிதர்சனமாகும் நாட்கள் அருகில் வருகின்றன.
நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் இனத்தவரை அதிக வறுமையுடையோராக சிங்களவர்கள் வாழ்கின்றனர். அரசொன்றின் இனமாக இருப்பினும், அவர்களுக்கான பொருளாதார பலமென்பது, சமுர்த்தி, சதொச, சில உள்ளூர் தொண்டுநிறுவனங்கள்தான். ஆனால் ஏனைய இனங்களின் பொருளாதார பலமென்பது அதுவல்ல. முஸ்லிம்களுக்கு மிகப் பிரதானமாக வணிகமிருக்கிறது. தமிழர்களுக்குப் புலம்பெயர்தளமிருக்கிறது. அதனையும் தாண்டி தமிழர்களிடம் ஓரளவு சேமிப்பிருக்கிறது.
போர், இயற்கையழிவு, வழிப்பறி என்பவற்றையும் கடந்து தமிழர்கள் திடமோடு நிற்க புலம்பெயர் தளப் பொருளாதாரப் பின்னணி பிரதான காரணமாகும். ஆனால் சிங்களவர்களுக்கு தம் சிங்கள அரசைத் தாண்டி எதுவுமில்லை. எனவே சிங்களவர்களின் அரசு வாங்கும் மொத்த பொருளாதார அடியும் அனைத்து சிங்களவர்களுக்குமானது. ஆபிரிக்க நாடுகள் கூட தகுந்த முன்னேற்பாடுகளுடன் கோவிட் – 19 ஐ எதிர்கொண்டு சமாளித்து மீளெழுகின்றன.
புலிகளையே வென்ற எமக்கு கோவிட் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல' என மார்தட்டிய அரசு, தன் மக்கள் புலம்பெயர்வதே எதிர்காலத்திற்கு நன்மையளிக்கும் என்கிறது. கோவிட் இலங்கைக்கு வரவேண்டிய பொருளாதார வருவாயை அழிக்க (சுற்றுலா பிரதானமாது) அதனைச் சமாளிக் அரசும் திணறுகிறது. அரசை நம்பியிருந்த சிங்களவர்களும் திணறுகின்றனர். இதனைச் சமாளிக்க சிங்களவர்களுக்கான அரசு சீனாவின் வாசலில் நிற்க, சிங்கள மக்கள் கடவுச்சீட்டு அலுவலக வாசலில் நிற்கின்றனர்.
கடன்கொடுத்து நாடுகளை அபகரிக்கும் திட்டத்தில் இலங்கை சிக்கி சின்னாபின்னமானாலும், இந்தச் சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயரும் சிங்களவர்களது பொருளாதாரம் பலமடையும். சிங்கள மக்களும், அரசும் மூடிய பண்பாட்டுக்குரியவர்கள். வெளியாரின் தொடர்புகள் அரிதானவர்கள். இந்தியா அளவிற்குக் கூடப் பல்லினப் பண்பாட்டுச் சூழலை, சக இனத்தவர்க்கு இருக்கும் உரிமைகளை அனுபவிக்க வழிகொடுக்காதவர்கள்.
தம் இனத்தை மட்டுமே முதன்மைப்படுத்தும் தன்முனைப்பாளர்கள். இங்கு நடந்திருக்கும் சித்திரவதைகள், மனித மாண்பிற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறகள், ஆட்கடத்தல்கள் என அனைத்திற்கும் இந்தக் குணாதிசயமும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றது. இனிவரும் காலத்தில் உலகின் பல தேசங்களுக்கும் புலம்பெயர்வதன் ஊடாக அந்தந்த நாடுகளது பண்பாட்டை, சக இனத்தவர்களுக்கு வழங்கப்படும் மனிதமாண்பை, சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்ள முடியும்.
ஒரு தேசத்தில் பல்லினமாக வாழ்வது எப்படி என்ற கற்பித்தலையும் இந்தப் புலம்பெயர்வு அனுபவம் வழங்கக்கூடும். இவ்வாறு புலம்பெயரும் சிங்களவர்கள் அந்தந்த நாடுகளில் கூட்டமைப்பாக இயங்குவார்களாயின் அது சிங்கள 'டயஸ்போறா'வாக மாற்றம்பெறும். ஐரோப்பிய நாடுகளைப் பின்னணியாகக் கொண்ட டயஸ்போறாக்காள் பொருளாதார ரீதியிலும் வலுவானவை.
எனவே பொருளாதார ரீதியில் நலிவடைந்து வரும் இலங்கைக்கு அழுத்தம் தரவல்ல அரசுக்கு வெளியான அமைப்பாக சிங்கள டயஸ்போறா மாறும். இதே சிங்கள டயஸ்போறாவினால் தமிழ் டயஸ்போறாவிற்கும் பாதிப்புக்கள் உண்டு. அனேக தமிழ் டயஸ்போறாக்கள் முன்வைக்கும் தமிழர்களுக்கான நீதி, அரசியல், இனப்பிரச்சினை தீர்வு, பொருளாதார விருத்தி குறித்த விடயங்களுக்கு எதிரான – பலமான அமைப்பாகவும் இந்த சிங்கள டயஸ்போறா மாற வாய்ப்பிருக்கிறது. இது இலங்கையைத் தாண்டி தமிழர் – சிங்களவர் இனப்பிரச்சினையை எடுத்துச்செல்லவும் வழியேற்படுத்தும்.
-ஜெரா-