வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ள பாலம்: மாற்று வழியின்றி தவிக்கும் மக்கள்(Photo)
கொட்டகலை தகரமலை பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் உள்ள 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த தோட்ட பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 50ற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் இந்த தோட்டத்திலிருந்து கொட்டகலை நகரில் உள்ள பாடசாலைக்கு மாணவர்கள் சென்று வருவதுடன், வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்ற பலரும் உள்ளனர்.
போக்குவரத்து தடை
அதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறித்த பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் இந்த பிரதேச மக்கள் அங்கிருந்து வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாலத்தின் ஊடான போக்குவரத்தே இவர்களுக்கு வசதியாக இருந்தமையால் மாற்றுப் பாதை ஒன்றின் ஊடாக செல்வதென்றால் காட்டுப்பாதை ஒன்றின் ஊடாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை
எனவே, உரிய அதிகாரிகள் இதனை கவனத்திற் கொண்டு உடனடியாக மாற்று வழியை அமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.