தொடருந்து சேவைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு
இன்றைய தொடருந்து சேவைகள் தொடர்பில் தொடருந்து திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர தொடருந்து வீதிகளில் மட்டுமே இன்று (17) காலை, தொடருந்துகள் இயக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, நீண்ட தூர தொடருந்து சேவைகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று (16) நள்ளிரவு முதல் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த வேலை நிறுத்த நடவடிக்கையின் காரணமாக, நேற்று இரவு இயக்கப்படவிருந்த அனைத்து தபால் தொடருந்துகளும் ரத்து செய்யப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்தது.