திட்டமிட்ட இன முரண்பாட்டு சதிகள்: ஈழவர் ஜனநாயக முன்னணி ஆதங்கம்(Video)
தற்போதைய ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே திட்டமிட்ட இன முரண்பாட்டு சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(25.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணிகள் அபகரிப்பு
“கிழக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பானது ஒரு அரசியல் சதியாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களது பூர்வீக காணிகள் அபகரிப்பு தற்போது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. எமது கட்சி இதனை வன்மையாக கண்டிக்கின்றது.
சமயத் தலைவர்களது செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக்
கொடுக்கும்.
கிழக்கு மாகாண ஆளுநர் நடுநிலைமையாக செயற்படுவது வரவேற்கத்தக்கது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணி மீளவும் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
அரச அதிகாரிகளின் பிழை
மேலும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இதனை பிழையாக வழிநடத்துகின்றார்.
ஜனாதிபதியோ, அமைச்சர்களோ இதற்கு உடன்பாடில்லை.இதற்கு அரச அதிகாரிகளின் பிழையான செயற்பாடுகளே காரணம் ஆகும்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றி பேரினவாதிகள் முற்றுகை இடுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சுகாதார செயற்பாடுகள் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்.”என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



