உலகப் பொருளாதாரத்திற்கு ஆபத்து: மசகு எண்ணெய் விலை கடுமையாக உயரும் - கத்தார் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இன்னும் சில நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று கத்தார் நாட்டின் வலுசக்தி அமைச்சர் சாத் அல்-காபி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மோதல் தொடர்ந்தால் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும்.
மசகு எண்ணெய் விலை
குறிப்பாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகப் பாதையான 'ஹார்முஸ் நீரிணை' வழியாகக் கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 150 டொலர் வரை உயரக்கூடும்.
தற்போது சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 4.4% உயர்ந்து 89.17 டொலரை எட்டியுள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடை காரணமாக இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி
ஏற்கனவே கத்தார் எனர்ஜி நிறுவனம் தனது திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியைத் தாக்குதல்கள் காரணமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், போர் இப்போதே நின்றாலும் நிலைமை சீராகப் பல மாதங்கள் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இது உலகளாவிய பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.