பயங்கரவாத அமைப்பு எனக்கூறப்பட்ட கட்டார் நிறுவனத்தின் அலுவலகம் மீண்டும் இலங்கையில்
இலங்கை அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் பயங்கரவாத அமைப்பு எனக்கூறிய கட்டார் அரசின் மிகப் பெரிய சமூக சேவை தொண்டு நிதியமான கட்டார் செரிட்டி நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி மற்றும் தற்போது இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள கட்டார் செரிட்டி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி யூசேஃப் அல் குவேரி ஆகியோர் தலைமையில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
11 மில்லியன் டொலர்களுடன் வந்துள்ள கட்டார் நிதியம்
கட்டார் சமூக சேவை நிதியம் 11.7 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியுதவி இலங்கை அரசின் வழிக்காட்டலின் கீழ் தேவையான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சேவ் த பேர்ள் அமைப்புக்கு கட்டார் செரிட்டி நிறுவனம் நிதியை அன்பளிப்பு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதுடன் கடந்த காலத்தில் அது பெரும் வாத விவாதங்களை ஏற்படுத்திருந்தது.
பயங்கரவாத அமைப்பு எனக்கூறி நாடாளுமன்றத்தில் கோஷமிட்ட சிங்கள அரசியல்வாதிகள்
அப்போது கட்டாரின் இந்த சமூக சேவை நிதியம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனம் என சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தினர்.
இந்த நிதியம் பயங்கரவாத அமைப்பு எனக்கூறி அமைச்சர் அலி சப்றி அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் கட்டார் செரிட்டி நிறுவனத்தின் அலுவலகம் மீண்டும் இலங்கையில் திறக்கப்பட்டுள்ளதுடன் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி அல் குவேரி தன்னை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.