புத்தளம் - பாலாவி இடையிலான தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்
டிட்வா சூறாவளி அனர்த்தத்திற்கு பின்னர், புத்தளம் முதல் பாலாவி வரையிலான தொடருந்து சேவை ஆரம்பமாகவுள்ளது.
நாளை(19.012026)திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கை தொடருந்து சேவை திணைக்களம் அறிவித்துள்ளது.
டிட்வா சூறாவளியினால் நாடு முழுவதும் பல தொடருந்து பாதைகள் சேதமடைந்ததுடன், நீர்கொழும்பு முதல் புத்தளம் வரையிலான ரயில் பாதை கடுமையாக சேதமடைந்திருந்தது.
அத்துடன், சிலாபம் முதல் புத்தளம் வரையிலான ரயில் பாதையின், பத்துலுஓய பாலத்திற்கு அருகில் 200 அடிக்கும் அதிகமான பகுதி வெள்ளம் காரணமாக முற்றிலுமாக சேதமடைந்தது.
நாளை முதல் ஆரம்பம்
மஹாவெவ பகுதியில் கடுமையாக சேதமடைந்த பகுதி சரிசெய்யப்பட்ட பின்னர், சிலாபம் வரையிலான தொடருந்து சேவை நேற்று(17) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த தொடருந்து பாதையின் மீதமுள்ள சேதமடைந்த பகுதிகளை தொடருந்து சேவை திணைக்களத்தின் வீதி பராமரிப்பு சேவை பிரிவின் ஊழியர்கள் படிப்படியாக புணரமைத்துள்ளனர்.
இதன்படி, இன்று 18ஆம் திகதிக்குள் அதன் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 53 நாட்களுக்குப் பின்னர் நாளை(19) காலை அலுவலக தொடருந்தை பாலாவி வரை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடருந்து சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.