புடினின் இந்திய பயணம் தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும்10ஆம் திகதிகளில் G20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்விடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்பது பரிசீலிக்கப்படுகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், அதை நிராகரிக்க முடியாது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. G20 வடிவத்தில் ரஷ்யா அதன் முழு பங்கேற்பை தொடர்கிறது. நாங்கள் அதை தொடர விரும்புகிறோம் என்றார்.
ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடின் G20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த G20 மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான குழு பங்கேற்றது 2020 மற்றும் 2021ம் ஆண்டு நடந்த மாநாட்டில் புடின் வீடியோ மூலம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.