புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் நிரந்தர நியமனம் கோரி நேற்று(16) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் கடந்த வருடம் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களில் சிலர் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படாத நிலுவை சம்பளத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கோரியும், நிறுவனத்தின் முக்கிய வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் போராட்டம்
ஊழியர்களின் போராட்டம் காரணமாக எந்தவொரு நபரும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாதவாறு நிறுவன வாயிலை முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள், நிறுவன மேலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கமைய இ கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 34 பேரும்இ ஜூலை மாதம் 46 பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 34 பேருக்கு மட்டுமே 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு இதுவரை எந்தவொரு கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்று அதன் போது சுட்டிக் காட்டப்பட்டது.
பேச்சுவார்த்தை
கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி இவ்விடயம் தொடர்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது நேர்முகத் தேர்வு நடைபெறும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், அது இன்றுவரை நடைபெறவில்லை என்றும் ஊழியர்கள் சுட்டிக்காட்டினர்.
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, பெப்ரவரி மாதத்தில் சம்பளம் வழங்கப்படும் என பொதுமுகாமையாளர் கூறியதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிர்வாகம் நாளாந்த கூலி அடிப்படையில் நியமனத்தை மாற்ற தீர்மானித்ததாக கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள ஊழியர்கள், தங்களுக்கான உரிமைகளை பெறும் வரை தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து செல்லப் போவதாகவும் வலியுறுத்தியுள்ளனர்.