ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனம் தொடர்பான வெளியீடு: அரசாங்கம் வழங்கியுள்ள தகவல்
ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை வெளியிட்டால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கே குறித்த பதில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திததி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வந்து சென்றமைக்கான செலவீனம் மற்றும் கடந்த 2024ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்க வருகை தந்து சென்றமைக்கான செலவீனம் தொடர்பிலும் கடந்த 05ஆம் திகதி மாவட்ட செயலகத்தின் ஊடாக தகவல் கோரப்பட்டது.
இரகசியத் தகவல்கள்
தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக கடந்த 17 .02. 2025 அன்று தகவல் கிடைத்தமைக்கான ஆவணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜனாதிபதியின் யாழ்பாணம் விஜயம் தொடர்பான தகவல் ஜனாபதியின் பாதுகாப்பினை நேரடியாக பாதிக்கும் இரகசியத் தகவல்களாக இருப்பதால் 2016ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ) (1)பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த தகவல்களை வழங்கமுடியாது என குறிப்பிட்டு மேன்முறையீடு மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதியின் யாழ். வருகை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கோரப்படும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அண்மையில் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் செலவீனம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் 5(1)(அ)(1) கீழ் ஜனாதிபதியின் யாழ். வருகையின் செலவீனத்தை நிராகரித்தது.
பொது நிதி
ஆனால் குறிப்பிட்ட பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள அரசின் ஆட்புலத்தையோ, இறைமையையோ, பாதுகாப்பையோ வருகைக்கான செலவீனம் கேள்விக்குட்படுத்தவில்லை. மக்களின் பொது நிதியே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறித்த விடயங்கள் கேள்விக்குட்படுத்தினால் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவீனம் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லையா? ஆகவே வெளிநாட்டு செலவீனம் தொடர்பில் தெரிவிக்கின்ற பொழுதும் உள்நாட்டு சுற்றுப்பயணத்தில் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளனவா என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அரசாங்கம் தகவல் அறியும் உரிமையினை தொடர்ந்து இழுத்தடித்து வழங்க முற்படுகின்றதா என சந்தேகம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.