இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தம்: 220 இலட்சம் இலங்கையர்கள் பலியாகக்கூடிய அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தத்தால் 220 இலட்சம் இலங்கையர்கள் மாபெரும் போரில் பலியாகக்கூடிய அபாயம் உள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியின் நிர்வாக உறுப்பினர் புபுது ஜயகொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தரவுத்தளம் உருவாக்கும் பொறுப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடனான கொடுக்கல் வாங்கல் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அதற்காக தரவுத்தளமொன்று உருவாக்கப்பட்டு அதனை நிர்வகிக்கும் பொறுப்பு சிங்கப்பூர் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுமார் 1500 அரச நிறுவனங்களுடைய கொடுக்கல் வாங்கல் தொடர்பான அனைத்து தகவல்களும் அந்த நிறுவனத்தின் வசமாகிறது.
அதேநேரம், சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ சக்திக்கு எதிரான அணியை உருவாக்கும் நோக்கத்துடன் இலங்கையுடன் இந்தியா இராணுவ ஒப்பந்தத்தில் தந்திர ரீதியாக கையெழுத்திடவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவிற்கு எதிரான இந்தியாவின் யுத்தம்
இதனூடாக சீனாவுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்தில் இலங்கையர்களைப் பலிகொடுப்பதற்கு இந்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
எனவே, இந்தியாவுக்கும் - இலங்கைக்குமிடையில் எதிர்வரும் 5ஆம் திகதி கைச்சாத்தாகவுள்ள இந்த ஒப்பந்தத்தினூடாக 220 இலட்சம் இலங்கையர்கள் மாபெரும் போரில் பலியாகக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
