பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு - எரிசக்தி அமைச்சுக்கிடையில் மோதல்!
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையில் நிலவும் மோதல்கள் அடுத்த வாரத்தில் முக்கிய கட்டத்தை நோக்கி நகர்கின்றன.
மின்சாரக்கட்டண உயர்வுக்கு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க எதிர்ப்பு வெளியிட்டது முதல், இந்த மோதல் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் ஜனக ரட்நாயக்கவை, ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது மே 24 ஆம் திகதியன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான பிற நகர்வுகளும் நடந்து வருகின்றன.
தேசிய கொள்கை முன்னுரிமை
இதன் ஒரு கட்டமாக, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை கண்டறிவதற்கான நாமல் ராஜபக்ச தலைமையிலான உபகுழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.
அதில் மின்சாரக்கட்டணத்தை அதிகரிக்க எடுத்த முடிவின்போது, பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இருந்த அதிகாரம் காரணமாக சில சிக்கல்கள் எழுந்தன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று பரிந்துரை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நல்லாட்சிக்கான சுயாதீன ஆணைக்குழுக்களை அறிமுகப்படுத்திய முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாமல் ராஜபக்சவின் தலைமையில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்காக தீர்மானம் எடுக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார்கள் என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |