எரிபொருட்கள் நிலையத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் விசனம் (VIDEO)
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் சில எரிபொருள் நிலையத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான எரிபொருட்கள் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் பொதுமக்கள் நீண்ட வரிசைகளிலிருந்தே எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
மட்டக்களப்பு - ஊறணியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டதை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதிகாலையில் பல்வேறு தொழிலுக்காகச் சென்றவர்கள் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வருகைதந்த போதிலும் எரிபொருள் இல்லையென்று திருப்பியனுப்பிய நிலையில் சில வாகனங்களுக்கு அங்கு எரிபொருள் நிரப்பப்படுவதைக் கண்ட மக்கள் அது தொடர்பில் கேள்வியெழுப்பியதைக் காணமுடிந்தது.
அதிகாலை வேளையில் தாங்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் இதன்போது பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
எனினும் வைத்தியர்கள் உட்பட அத்தியாவசிய தேவைக்காகச் செல்வோருக்கு மட்டும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்குவதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சேர்ந்தவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் காலை வேளையில் சென்று தமது தொழிலைச் செய்தால் தான் தமது குடும்பத்திற்கு
உணவு வழங்க முடியும். பெட்ரோல் இல்லாத காரணத்தினால் தமது தொழில் நிலை
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.