காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்யுங்கள்! பொது மக்கள் கோரிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெருமளவான காட்டு வளம் அழிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, காடுகளுக்கு தீ வைப்பதனால் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
கோரிக்கை
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவன்புர குடாஓயா வீடமைப்பு பகுதியில் அமைந்துள்ள மானா பற்றைக்காட்டுக்கு பகுதிக்கு இனந்தெரியாத விசமிகளால் இன்று பகல் தீ வைக்கப்பட்டுள்ளதனால் அங்குள்ள பெரும் மானா காட்டுப்பகுதி அழிக்கப்பட்டுள்ளதுடன் நீர் குழாங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

வறட்சியாக காலநிலையுடன் காற்றும் வேகமாக வீசுவதனால் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது முடியாதுள்ளது.இதனால் தீ வேகமாக பரவி வருகிறது.
குறித்த பகுதியில் நீர் தட்டுப்பாடு காரணமாக அதிகமானவர்கள் குழாய் கிணறுகளை பயன்படுத்தியே குடிநீரை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு தீ வைக்கப்படுவதனால் பூமி வெப்பமடைந்து நீர் மேலும் தாழ்வதற்கான வாயப்புக்கள் காணப்படுகின்றன.
உரிய நடவடிக்கை
இதனால் ஏற்கனவே குடிநீர் பிரச்சினை முகம் கொடுத்து வரும் குறித்த பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடு உக்கிரமடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இதனால் தீ வைப்பதனை உடன் நிறுத்தப்பட வேண்டும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அது மாத்திரமன்றி காட்டில் வாழும் வன விலங்குகள் நீர் மற்றும் உணவு தேடி மக்கள் வசிப்பிடங்களை நோக்கி வர கூடிய அபாயமும் காணப்படுகின்றன.
எனவே காடுகளுக்கு தீ வைப்பதனை உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.