பயங்கரவாதத் தடைச் சட்டம் எதற்காக இன்னமும் நீக்கப்படவில்லை : ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
கொடூர பயங்கரவாதத் தடைச் சட்டம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது வேதனை அளிக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குற்றம் காண விரும்பவில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசின் பாதாளக் குழுவுக்குவுக்கு எதிரான செயற்பாடு, போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்பவற்றை நாம் ஆதரிக்கின்றோம். இவற்றில் குற்றம் காண விரும்பவில்லை.
ஜே.ஆர். ஜயவர்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமானது மிகவும் பயங்கரமானது. அந்தச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டன. பேரவலங்கள் அரங்கேறின. இந்தச் சட்டத்தின் கீழ் ஜே.வி.பி. தோழர்களும் பாதிக்கப்பட்டனர்.
வடக்கு, கிழக்கு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே, அது விரைவில் நீக்கப்பட வேண்டும். அதேபோல் பொறுப்புக்கூறலும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.