நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான தளத்துக்காக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்
தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றைப் பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னுடைய அனுபவத்தைப் பொறுத்த வரை மாகாணசபை கூடிப் பேசுவதற்கான ஒரு கட்டமைப்பு. மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். வவுனியா வடக்கு பிரதேச சபை போல மாகாணசபையும் மாறலாம்.
புதிய அரசியல் யாப்பில் சில சமயங்களில் மாகாண சபையை இல்லாமல் செய்து முழுமையான ஒற்றையாட்சி யாப்பு உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது. மாகாணசபை முறை தான் தீர்வென நாங்கள் கூறவில்லை. அது ஒரு அடிப்படை. ஆனால் ஒரு சிலர் மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகவே ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனக் கூறுகின்றார்கள்.
தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றைப் பேசுவதற்கான ஒரு
தளம் தேவை. அதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சீனா கால் பதிப்பது தனது பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலான நிலை என்பது இந்தியாவுக்குத் தெரியும்.
அதை கையாள வேண்டியது
இந்தியத் தரப்பு. எங்களைப் பொறுத்தவரை இந்த விடயத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பில்
நாங்கள் இல்லை. சீனாவின் செயற்பாட்டில் எமக்கு உடன்பாடில்லை என்பதை நாங்கள்
தெளிவாகச் சொல்கின்றோம். அதற்கு மேலாக இது இரு நாடுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம்
என தெரிவித்துள்ளார்.