தேர்தல் குறித்து டில்வின் சில்வா கிளப்பிய சர்ச்சை.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்றும், அதற்கு நிதி இல்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இன்று (26) அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
நிதி குறைபாடு..
தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் இதன்போது கூறிய அமைச்சர், சட்ட விதிமுறைகளே தேர்தலை நடத்துவதை சாத்தியமற்றதாக்கியுள்ள பிரச்சினை என்றும் மேலும் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு நாடாளுமன்றக் குழு தற்போது செயல்பட்டு வருவதாகவும், அக்குழுவில் விவாதங்கள் நடைபெற்று வருவதால், உரிய சட்ட விதிகள் கிடைத்தவுடன் தேர்தலை நடத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அரசாங்கம் 8 மாதங்களில் 2 தேர்தல்களை நடத்தியுள்ளது. மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து, அரசியலமைப்பிற்கு இணங்க இந்த மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதே எங்கள் நம்பிக்கையாகும்.
சட்ட விதிகளில் சிக்கல்
இது தொடர்பாக நிதிப் பிரச்சினை எதுவும் இல்லை. பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. பணம் ஒதுக்கப்படாவிட்டாலும், ஒரு துணை மதிப்பீட்டின் மூலம் தேர்தல்களுக்குப் பணம் ஒதுக்குவது பொதுவாக சாத்தியமாகும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால், மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் தேவையாக இருந்தாலும், அதற்குத் தேவையான சட்ட விதிகளில் ஒரு சிக்கல் உள்ளது.
அதைத் தீர்ப்பதற்காக ஒரு நாடாளுமன்றக் குழு தற்போது செயல்பட்டு வருகிறது, அது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்தச் சட்ட விதி உருவாக்கப்பட்டால், எங்களால் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.