மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம்! வெளியான தகவல்
மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 அல்லது 4 வருடங்களுக்குத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தாக கூறி, ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கருத்து குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்குத் தயாராகவே இருக்கின்றது.
எனினும், சட்டச் சிக்கல்கள் தடையாக உள்ள நிலையில் அதனை நாடாளுமன்றத்தினூடாக நிவர்த்திப்பதாக அரசாங்கமும் உறுதியளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், குறித்த கருத்தை வெளியிட்டிருப்பார் என, தாம் நம்பவில்லை என அந்த உயரதிகாரி குறிப்பிட்டார்.
பொய்யான தகவல்
அத்துடன், ஆணைக்குழுவின் தலைவரைத் தாம் இது தொடர்பில் இன்று காலை தொடர்பு கொண்டு கேட்ட போது, தாம் தேர்தல்கள் நடத்தப்படாது என்ற கருத்தை வெளியிடவில்லை என்றும், தவறாகப் பகிரப்படும் இந்த செய்திக்கான மறுப்பைத் தாம் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக, குறித்த உயரதிகாரி தெரிவித்தார்.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் தாம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



