மன்னாரில் மணல் விலை நிர்ணயம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய தவிசாளர்கள் - விலை முடிவுகள் இழுபறி
மன்னார் மாவட்டத்தில் மணல் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தின் போது, மன்னார் நகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் தவிசாளர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த கூட்டம் இன்று(07.05.2026) மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துதல் மற்றும் மணல் விலையை முறைப்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தவிசாளர்கள் வெளிநடப்பு
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வழிகாட்டலில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்,பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், மணல் அகழ்வு மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, மாவட்டத்தில் மணல் விலை சடுதியாக அதிகரித்துள்ளமை யைக் கட்டுப்படுத்துதல், அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வுகளைத் தடுத்தல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை மீண்டும் வழங்குவது குறித்து ஆலோசித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, மன்னார் நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அதிரடியாக வெளியேறியுள்ளனர்.
முன்னைய கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு முரணான வகையில் இன்றைய கூட்டத்தின் போக்கு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலையை தீர்மானிக்க முடியாத நிலை
மக்களின் நலனை புறந்தள்ளி எடுக்கப்படும் இவ்வாறான முடிவுகளை ஏற்க முடியாது என்றும், மன்னார் மாவட்டத்தில் மணல் மாபியாக்கள் செயல்பாடு தொடர்பில் சுட்டிக்காட்டி மன்னார் மாவட்டத்தை நாசம் செய்வது தொடர்பில் தங்களது கருத்தை வெளியிட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.
மணல் விலையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஏனைய தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

நீண்ட நேர விவாதங்களின் பின்னரும், முறையான விலை நிர்ணயம் அல்லது மணல் அகழ்வு தொடர்பான உறுதியான முடிவுகள் எதுவும் தெரிவிக்க முடியாத நிலையில் கூட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மாவட்டத்தில் நிலவும் மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலை தொடர்கிறது .எனினும், முறையான தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் இந்த கூட்டம் எந்தவித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளது.

